PUBLISHED ON : ஜன 13, 2012

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
போர் வினோதங்கள்!
ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் உக்ரமாக நடக்கும் போர்களில் சில வினோதமான நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. ஆரம்ப காலங்களில் போர் விமானங்கள் போருக்கான பொருட்களை கொண்டு செல்ல மட்டுமே பயன்பட்டு வந்தன. 1911-ல் துருக்கிய போரின் போது விமானங்களில் குண்டுகளை எடுத்துச் சென்ற இத்தாலிய விமானி ஒருவர், இத்தனை குண்டுகளை வைத்திருந்தும் நேரடியாக போரில் ஈடுபட முடியவில்லையே! என்ற ஆதங்கத்தில் 2 குண்டுகளை கையில் எடுத்து வீசினார். இப்படித்தான் விமானத்தில் இருந்து குண்டு போடும் முறை ஏற்பட்டது.
ஜப்பானிய போர் விமானிகளில் மிக முக்கியமானவர் ஹிரோயோஷி நிஷிசலா. தனி ஆளாக விமானத்தில் பறந்து 80 எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியவர். கடைசியில் பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும்போது, விபத்தில் சிக்கி இறந்து போனார்.
இரண்டாம் உலகப்போரின் போது கிரிமியாவின், 'சூடாக்' என்ற இடத்தில் போர் நடந்தது. இதில் ஜெர்மனியும், ரஷ்யாவும் மோதிக் கொண்டன. ஆவேசமாக நடந்த இந்த போர், நாட்டை காக்க நடந்தது அல்ல. ஒரு குடவுனை காப்பாற்ற நடந்தது. அப்படி அந்த குடவுனில் என்ன இருந்தது? என்று பார்த்தால் குடவுன் முழுக்க லட்சக்கணக்கான பாட்டில்களில் குடிமகன்களுக்கான, 'சரக்கு' இருந்தது.
ரஷ்யாவுக்கும், பின்லாந்துக்கும் இடையே நடந்த யுத்தத்தில் ஒரு பின்லாந்து வீரரின் உடலுக்குள் பாய்ந்த குண்டு, வெடிக்காமல் அப்படியே உடலில் பொதிந்து கொண்டது. எப்போது வெடிக்குமோ? என்ற பயத்தில் வீரர் மயங்கி கீழே விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வீரனை, எங்கே வெடித்து விடுமோ என்ற பயத்தில் டாக்டர்கள் நடுங்கியபடியே ஆபரேஷன் செய்து அந்த குண்டை வெளியே எடுத்தனர்.
1942-ல் ரஷ்யாவின் பைலட்டான கஸ்னேக்ஸோவ், தன் விமானம் தாக்குதலுக்கு உள்ளானபோது உயிர் தப்பினார். அந்த இடத்தில் ஒரு ஜெர்மானிய போர் விமானம் நின்று கொண்டு இருந்தது. அவர் அந்த விமானத்தில் ஏறி பறந்தார், தான் எதிரி நாட்டு விமானத்தில் பறக்கிறோம் என்பது தெரியாமல் ரஷ்யாவுக்குள் நுழைந்து விட... ரஷ்ய விமானங்களிடம் இருந்து பிழைப்பதுதான் அவருக்கு பெரும் சவாலாக இருந்தது.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க தரப்பு படை, ஜெர்மன் தலைநகர் பெர்லின் மீது குண்டு வீசியது. இதில் பெர்லின் மிருகக்காட்சி சாலையில் வசித்து வந்த யுத்தத்துக்கு சம்பந்தமே இல்லாத யானை மட்டுமே இறந்தது. முதல் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய துப்பாக்கி பற்றிய தொழில்நுட்பம், ஜெர்மானியத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
அமெரிக்கர்கள் ஜெர்மானியர்களை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தாலும், அந்த துப்பாக்கி தொழில்நுட்பத்துக்கான ராயல்டியை தொடர்ந்து ஜெர்மனிக்கு வழங்கிக் கொண்டே இருந்தனர்.
தண்ணீர் படுக்கையில் ஒரு சக்கரவர்த்தி!
உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் உணவு தேவைப்படுகிறது. அதே போல்தான் மூளைக்கும் உணவு தேவை. மூளை எப்போதும் ஏகப்பட்ட பசியோடு இருக்கும். பசி என்றால் ஏதோ சாம்பார் சாதம், பிரியாணி கேட்டு பசிப்பதல்ல. அது ஆக்சிஜன் பசி. மூளையை பாதுகாக்க ஐந்து போர்வைகள் இரண்டு திரவங்கள் உண்டு. மண்டை தோலில் இருந்து தொடங்கி, பின்மண்டை ஓடு, கபால எலும்பு, அதன் கீழ் மெனன்ஜிஸ் என்ற பகுதி வரை இது செல்கிறது.
உடலிலே கெட்டியான சருமம் தலையில்தான் இருக்கிறது. அதற்கு மேல் தலைமுடி இருக்கிறது. ஒட்டப்பட்ட வலுவான தேங்காய் போல இருக்கிறது. அதற்குள் மூளை மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. மண்டையில் விழும் சகல விதமான அடிகளையும் இது தாங்கிக் கொண்டு மூளையை காப்பாற்றுகிறது.
மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி ரத்தம் தேவைப்படுகிறது. உடலின் மொத்த எடையில் 50ல் ஒரு பங்கு அளவு கொண்டு ரத்தம், ஆக்சிஜன் ஆகியவற்றின் மொத்த தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது. மூளை தூங்கினாலும் விழிந்திருந்தாலும் பசி... பசி... என்று அலறும் ராட்சத குழந்தை.
மூளைக்கு அவ்வளவு சக்திதேவை. தனக்கான சக்தியை சேமித்து வைத்து கொள்வதற்கு இடமில்லை. எனவே, அதற்கு எப்போதும் ரத்தம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். வெறும் 10 விநாடி ரத்த வரவு இல்லாமல் நின்று போனால் கூட மூளையால் தாங்கமுடியாது. உடனே மயக்கம் போட்டு விடும். திடீரென்று மனிதர்கள் மயங்கி விழுவது இப்படி ரத்தம் மூளைக்கு செல்வது தடைபடுவதால்தான்.
சில நிமிடம் ஆக்சிஜன் இல்லை என்றாலும் அவ்வளவுதான். அவர் மரணம் அடையும் நிலைக்கு சென்று விடுவார். அதாவது கோமா நிலைக்கு போய்விடுவார். இப்படி மூளை ராட்சத உணவு உண்டாலும் அதன் உணவுத் தேவை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். 'எனக்கான உணவை (ஆக்சிஜனை) எப்போதும் குறைக்காதே... நான் அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வேன்' என்று இதயத்துக்கு கட்டளையிடும் முளை அதை செலவிடுவது குறைவு. உதாரணமாக, மூன்று மணி நேரம் மூளையை கசக்கிப் பிழிந்து ஒரு கவிதை எழுதினால் அதற்கு மூளை எவ்வளவு சக்தி செலவழித்திருக்கும் தெரியுமா? ஒரு பட்டாணி அளவுதான் செலவு செய்திருக்கும் மூளை அப்படியொரு சுகவாசி.
எப்போதும் அது சக்கரவர்த்தி போல் தண்ணீர் படுக்கையில் உல்லாசமாக மிதந்து கொண்டிருக்கிறது. இந்த மிதவையே அதன் எடையை இருபது மடங்கு குறைத்து விடுகிறது. இந்த திரவம்தான் நாம் எப்படி குதித்தாலும் மூளைக்கு ஒரு சின்ன அதிர்வு கூட ஏற்படாமல் பாதுகாக்கிறது. இந்த திரவம் இல்லையென்றால் தலையை திருப்பினாலோ, தலையை ஆட்டினாலோ வலி உயிர்போகும். உடலின் நிலைக்கு ஏற்ப இந்த திரவத்தின் அழுத்தம் மாறுபடும். மூளை அதிகமாக சாப்பிட்டாலும் உடலுக்கு மிக முக்கியமான உறுப்பு அதுதான்.
நாக்கு சுளுக்கு!
கை, கால், கழுத்து என நம் உடம்பினால் சில சமயம் சுளுக்கு ஏற்படும். காரணம் நரம்புகள். நாவிற்கு ஏன் நரம்பில்லை? நரம்புள்ள பகுதிகள் சுளுக்கும், கை, கால், கழுத்து சுளுக்குகின்றன. நாவில் நரம்பை வைத்தால், பேசும்போது சுளுக்கிக் கொள்ளும். பேச்சு அப்படியே தடைப்பட்டு விடும். நமது கை, கால், ஒயாமல் வேலை செய்வதில்லை. நாக்கு மட்டும் பேசிக் கொண்டேயிருக்கும். நரம்பிருந்தால் தினமும் இரண்டு, மூன்று தடவையாவது சுளுக்கி கொள்ளும்.
உங்கள் அன்பில் ஆட்டம் போடும் அங்குராசு
