PUBLISHED ON : ஜன 13, 2012

கிருஷ்ண தேவராயரைப் போரிட்டு வெல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பிஹிமினி சுல்தான், மோசத்தால் விஜய நகர சாம்ராஜ்யத்தை அடைய நினைத்தான். அதற்காக லட்சம் வரான்களைத் தந்து சகல கலா சாம்ராட்டான நரசிம்ம ராயரை ஒரு திட்டத்தோடு விஜயநகரத்திற்கு அனுப்பி வைத்தான்.
நரசிம்மராயர், கிருஷ்ண தேவராயரின் அவைக்கு வந்து, அங்கு இருந்த பெரும் புலவர்களை எல்லாம் போட்டி போட்டு வென்றார்.
அதைக் கண்டு பிரமித்த கிருஷ்ணன் தேவராயர், ''உங்கள் புலமைக்கு உலகமே ஈடு இல்லை. உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்?'' என்று கேட்டார் கிருஷ்ண தேவராயர்.
''உங்கள் சாம்ராஜ்யம் முழுவதையும் எனக்குப் பரிசாக அளிக்க வேண்டும்,'' என்றார் நரசிம்மர்.
அதைக் கேட்டு கிருஷ்ண தேவராயர் அதிர்ச்சி அடைந்தார். அச்சமயங்களில் புத்திசாலித் தனத்தால் சமாளிக்கக் கூடிய தெனாலிராமன் அப்போது ஊரில் இல்லை. அதனால், ''நரசிம்மரே! நீங்கள் கேட்டபடி என் சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறேன். அதற்கு இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள்,'' என்று கூறி விட்டு, அவையைக் கலைத்தார் கிருஷ்ணதேவராயர்.
வெளியூருக்குச் சென்று இருந்த தெனாலிராமன், உடனே அழைத்து வரப்பட்டான். கிருஷ்ண தேவராயர் அவனிடம் நடந்ததை எல்லாம் கூறி விட்டு, ''ராமா! நீ தான் நம் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற வேண்டும்,'' என்றார்.
''சக்கரவர்த்தி! இது யாரோ பகை நாட்டு மன்னன் செய்த சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் நான் வெல்ல வேண்டும்,'' என்றான் தெனாலிராமன்.
மறுநாள் தெனாலிராமன் வைஷ்ணவ குருவான ஜீயர்வேடம் தரித்து, இருநூறு போலி பக்தர்களுடன் நரசிம்மர் தங்கி இருந்த விடுதி இருக்கும் தெரு வழியே ஆரவாரத்துடன் வந்தான்.
ஆரவாரத்தைக் கேட்டு நரசிம்மர் அவர் பாதங்களில் விழுந்து வணங்கி, ''சுவாமி! அடியேன் ஏதாவது கைங்கரியம் செய்ய வேண்டுமா?'' என்று பணிவோடு கேட்டார்.
''ஆமாம். நீ கிருஷ்ண தேவராயரிடம் இருந்து பெறப்போகும் சாம்ராஜ்யத்தை எனக்கு நீ தானமாகத் தரவேண்டும்,'' என்றார் போலி ஜீயர்.
வேறு வழி இல்லாமல், ''தருகிறேன்,'' என்றார் நரசிம்மர்.
அதற்கு இரண்டாவது நாள். ஜீயரை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரின் சபைக்கு வந்த நரசிம்மர், ''சக்கரவர்த்தி! உங்கள் சாம்ராஜ்யத்தை ஜீயருக்கு வழங்கி விடுங்கள்,'' என்றார்.
அடுத்த கணம், ''எனக்கு வழங்கிய சாம்ராஜ்யத்தை சக்கரவர்த்திகளுக்கே வழங்குகிறேன்,'' என்ற தெனாலிராமன் வேடத்தைக் கலைத்தான்.
நரசிம்மருக்குத் தலை சுற்றியது. தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினார்.
***
