PUBLISHED ON : ஜன 27, 2012

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
நட்சத்திரம் தந்த தங்கம்!
தங்கத்தின் விலையை கேட்டால், பலருக்கும் மயக்கம் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு அதன்விலை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், இந்த தங்கம் நமக்கு கிடைக்க, நாம் ஒரு எரிநட்சத்திரத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
பூமி 455 கோடி ஆண்டுகளுக்கு, முன்பு தோன்றியது. பூமி உருண்டு, திரண்டு பூகோள உருண்டையாக சூரியனை சுற்றி வந்தபோது, அதில் இருந்த இரும்பு உலோகம் அதன் மையப்பகுதிக்கு சென்றுவிட்டது. அதைத் தொடர்ந்து பொன்நிற உலோகமான தங்கமும் பூமியின் மையப்பகுதிக்கு சென்றுவிட்டது. தங்கம் மட்டுமல்ல, தங்கத்தை விட விலை மதிப்பு மிக்க பிளாட்டினம், ஒஸ்மினியம் போன்ற <உலோகங்களும் பூமியின் மையப்பகுதிக்கு சென்று அமிழ்ந்து விட்டன.
பூமியின் மேற்பரப்பில் கல்லும், மண்ணும் மாத்திரமே இருந்தன. பின் எப்படி இந்த உலோகங்கள் பூமியின் மேற்பரப்பிற்கு வந்தன? என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது.
அதற்கு பிரிஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விடையளித்துள்ளனர். சுமார் 390 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மீது மிகப்பெரிய எரி நட்சத்திரம் ஒன்று வந்து விழுந்தது. பலகோடி அணுகுண்டுகள் ஒன்று சேர்ந்து வெடித்தது போல் அதன் மோதல் இருந்தது. அந்த எரி நட்சத்திரம் வெடித்து சிதறியதில், பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன. அப்போதுதான் பூமியின் மையப்பகுதியில் இருந்த உலோகங்கள் பல சிதைவுகளுக்கு உள்ளாகி பூமியின் மேற்பரப்பிற்கு வந்தன. அதன் பிறகுதான் மனிதன் தோண்டி எடுக்கும் ஆழத்தில் உலோகங்கள் வந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மற்ற உலோகங்களோடு சேர்ந்து தங்கமும் பூமியின் மேற்பரப்பிற்கு வந்தது. இப்படி எரி நட்சத்திரம் வந்து தாக்கியதை, 'டெர்மினல் பம்பார்ட்மெண்ட்' என்று கூறுகின்றனர். அதனால், பூமியில் பெரிய பெரிய உலோக கட்டிகளிலும், பாறைகளிலும் தங்கம் ஒளிந்திருந்தது என்றும், அதனால் பூமியில் தங்கத்தை துல்லியமாக கண்டுபிடிக்க முடிந்தது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பூமியை எரிநட்சத்திரம் தாக்கியதால்தான் மையத்தில் இருந்த தங்கம் மேற்பரப்பிற்கு வந்தது. அப்படி ஒரு நட்சத்திர தாக்குதல் இல்லையென்றால் மனிதன் தங்கத்தை பார்த்திருக்கவே முடியாது என்றும் கூறுகின்றனர். எப்படியோ தங்கம் வந்தது அதனால் பலரின் வாழ்க்கை செழிப்பானது. பூமிக்குள் நமக்குத் தெரியாத உலோகங்கள் இன்னும் எத்தனையோ உள்ளன.
கடல் உண்டு! பீச் இல்லை!
இந்தியாவை போலவே, இத்தாலியும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கிய நாடு. இங்கும் இந்தியாவைப் போலவே, வாடகைக்கு வீடு கிடைக்கும் பிரச்னை அதிகம்.
சமீபத்தில், இத்தாலியில் ஒருவர் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார். அந்த விளம்பரத்தில், தனக்கு மூன்று அறைகள் கொண்ட வீடு தேவை என்றும், அதற்கு ஈடாக தம்முடைய மறைவுக்கு பின் தன் கண்களில் ஒன்றை தரப்போவதாக அறிவித்திருந்தார்.
இத்தாலி மக்கள் சாப்பிடும்போது உணவுடன் நீர் அருந்துவது இல்லை! அதற்கு பதிலாக திராட்சை ரசத்தை மட்டுமே அருந்துவர்.
இத்தாலியின் தெற்கு பகுதியான சாலர்னோ என்ற நகரத்தில் வசிக்கும் 65 வயதான அங்காலோ ரோமானிய மெமீல்லா என்பவருக்கு மூக்கு நீளம் ஏழு சென்டிமீட்டர்.
இத்தாலியர்கள் சங்கீதப் பிரியர்கள் எப்போதும் எதையாவது பாடியபடி முணுமுணுத்துக் கொண்டிருப்பர். கடையில் பொருட்களை விற்பவர்களும் பாடியபடி பொருட்களின் விவரங்களை கூறுவர்.
இத்தாலியில் தற்போது பூகம்ப வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்தில் 5 சதவீதம் பூகம்ப வரியாக செலுத்தவேண்டும்.
இத்தாலியர்கள் வேட்டை ஆடுவதில் ஆர்வம் மிக்கவர்கள். ஆண்டுதோறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்டையில் இறங்குகின்றனர். இதனால் இங்கு பறவை, விலங்குகள் இனம் அழிந்து வருகின்றன.
இத்தாலி நாட்டின் ஓரத்தில் சோரெண்டோ நகரில் கடல் உள்ளது. ஆனால், இதில் பீச் இல்லை. அதனால் கடல் மேல் பாலம் கட்டி, அங்கு காற்று வாங்குவதற்கான அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர்.
விரிந்த மானின் கொம்புகள்!
மானின் கொம்புகளை பார்த்து இருக்கிறீர்கள்தானே!
அது ஏன் படர்ந்து விரிந்துள்ளது? நீங்கள் நினைப்பதுபோல் மானின் பெரிய கொம்புகள் அத்தனை 'வெயிட்'டாக எல்லாம் இருக்காது. ஆரோக்கியமான மான்களுக்குத்தான் கொம்புகள் பெரிதாக வளரும். மற்ற ஆண் மான்கள் அதை பார்த்து சற்று பின்வாங்கும்.
கமகம காபி!
முதன் முதலாக காபி குடிக்கும் பழக்கம் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் தான் ஆரம்பமாகிறது.
17-ம் நூற்றாண்டில் காபி ஐரோப்பிய நாடுகளில் பரவியது. பல நாடுகள் காபிக் கொட்டை பயிர் செய்வதில் ஆர்வம் காட்டின. ஆனால், காபி கொட்டை செடி வெளிநாடுகளுக்கு போய் விடாதபடி கெடுபிடிகள் செய்தன.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரேசில் நாடும் இதில் ஆர்வம் காட்டியது. பிரெஞ்சு கயானாவில் இருந்து காபி செடியை கடத்தி வருமாறு பிரேசில் நாடு, ஒரு இளம் ராணுவ அதிகாரியை நிறைய பணம் கொடுத்து அனுப்பி வைத்தது.
அவர் பிரெஞ்சு கயானாவுக்கு போய் அங்கிருந்த கவர்னரின் வீட்டிலிருந்து காபி செடியை பெற்றார். இவர் மூலமாக ஒவ்வொரு நாடாக பரவி, நமக்கும் காபி குடிக்கும் பழக்கம் வந்து விட்டது.
காலங்காத்தாலே, பல் தேய்த்துவிட்டு, முகம் அலம்பி கொண்டு வந்தால்... 'அம்மா பாப்பா!' சுட சுட கையில் காபியுடன் தேவதை மாதிரி நிப்பாங்க. அம்மாவோட ஸ்மைலான முகத்தை பார்த்து நாமும் ஸ்மைலுவோம்.
அம்மா அன்பை கொட்டி போட்ட காபி சாதாரணமாகவா இருக்கும், செம சூப்பரா இருக்கும். அதை குடித்தவுடன் செம தெம்பு வருமே. என்ன படிக்கலாம், என்ன எழுதலாம்னு டக்கரா நம்ம வேலையை செய்ய தொடங்குவோம், இல்லையா?
என்றென்றும் உங்கள் அன்புடன்,
அங்குராசு.
