PUBLISHED ON : செப் 26, 2020

கொங்கு நாட்டு மன்னன் அதியமான் அஞ்சி. தகடூரை, தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். கடையெழு வள்ளல்களில் ஒருவன்; ஆற்றலும், வீரமும் மிக்கவன்; குடிமக்கள் நலன் கருதி, ஆட்சிப் புரிந்தவன். நாடிவரும் அறிஞர், புலவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கி, பெருமிதம் அடைந்தான்.
சேர நாட்டைச் சேர்ந்த அவ்வையார், சிறந்த பெண்பாற் புலவர். அதியமான் அஞ்சியின் ஆட்சி சிறப்பை அறிந்தார். புலமை திறனைக் காட்டி, பரிசு பெற வந்தார்.
அகமும், முகமும் மலர்ந்து வரவேற்றான் அதியமான். அரண்மனையிலேயே தங்க வைத்து, கவிதைகளையும், அறிவுரைகளையும் கேட்டு மகிழ்ந்தான்.
'கதிரவன் சுடர் விட்டு பிரகாசித்தால், மறையாத இருளும் உண்டோ... நீ போர்க்களம் புகுந்தால், எதிர்க்க வல்லார் யார்...' என, போற்றி பாடியதை கேட்டு வீர உணர்வால் வீறுடன் நிற்பான் அதியமான்.
அரண்மனையில், நீண்ட நாள் தங்கியிருந்தார் அவ்வையார். எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர் ஆதலால், வேற்றுார் செல்ல விரும்பினார். இதை அறிந்த அதியமான், அவருக்கு பரிசு அளிக்காமல், காலம் தாழ்த்தினான்.
'அவ்வையார் அகன்று போய் விட்டால், தீஞ்சுவைக் கவிதைகள் பாடி மகிழ்விப்பவர் யார்' என்று எண்ணியதே அதற்கு காரணம்.
இதை தவறாக எண்ணி விட்டார் அவ்வையார். 'சிறப்பை அறியாது, மன்னன் பரிசு அளிக்கவில்லை' என எண்ணியவருக்கு, சினம் பொங்கியது. அதியமானிடம் சொல்லிக் கொள்ளாமலேயே, தகடூரை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
இதை அறிந்த அதியமான் வேதனையுடன், 'பரிசில் பெற்றதும், என்னை விட்டு அகன்று போய் விடுவீரே என்ற அச்சத்தால் தான், காலம் தாழ்த்தினேன். பொறுத்தருள்க...' என, வேண்டினான்.
அவன் நல்ல எண்ணத்தை புரிந்து கொண்ட அவ்வையார், சினம் தணிந்தார்.
ஒரு நாள் -
மலைவளம் காணச் சென்றான் அதியமான். மலை உச்சியில், பிளவுப்பட்ட பாறை ஒன்றின் பக்கம், நெல்லி மரம் நின்றது. அதில், நெல்லிக்கனி தொங்குவதைக் கண்டான். மிக அரிய கனி; உண்டவர், நீண்ட காலம் வாழ்ந்திருப்பார். அதை எளிதாகக் கொய்து எடுக்க இயலவில்லை.
மிக துணிவுடன், அக்கனியை கொய்து, அரண்மனைக்கு வந்தான் அதியமான்.
அக்கனியை உண்ண எண்ணிய போது, 'அதிசய நெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிர் வாழ்வதால் என்ன பயன்... என்னை விடவும், உலகுக்கு பயன்படுபவர் அல்லவா உண்ண வேண்டும்' என எண்ணினான். அவ்வையாரின் நினைவு வந்தது. அவருக்கே, நெல்லிக்கனியை கொடுக்க மனம் இசைந்தது.
'அதிசய நெல்லிக்கனியை உண்டால், நீண்ட காலம் வாழ்ந்து, தமிழ்மொழியை வளம்பெறச் செய்வார்' என, அக்கனியை கொடுத்தான்.
அதன் அருமை, பெருமை தெரியாது, சாதாரணக் கனி என உண்டார் அவ்வையார். உண்ணுவதைக் கண்டு, உவகை அடைந்தான். பின், நெல்லிக்கனியின் சிறப்பை தெரிவித்தான்.
மெய்சிலிர்த்த அவ்வையார், 'பேரன்பு கொண்ட மன்னவனே... அதிசய நெல்லிக்கனியை நீ உண்டு நெடுங்காலம் வாழ்ந்திருந்து செங்கோலாட்சி நடத்தி, மக்கள் வாழ்வை வளம்பெறச் செய்திருக்கலாமே... முதிய எனக்கு ஏனோ அளித்தாய்...' என, கேட்டார்.
நோக்கத்தை எடுத்துரைத்தான் அதியமான். அவனது பண்பை வியந்துப் பாராட்டினார் அவ்வையார்.
நெல்லிக்கனியை உண்டு நீண்டகாலம் வாழ்ந்த அவ்வையார், தமிழ்மொழிக்கும், நாட்டுக்கும் ஈடு இணையற்ற பணி செய்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
குழந்தைகளே... வள்ளல் தன்மையுடன் வாழ பழகுங்கள்.
