PUBLISHED ON : செப் 12, 2020

பட்டிப்புலத்தில் ஏழை ஒருவன் இருந்தான். தினமும் காட்டில் விறகு வெட்டி விற்று, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். தினமும் அவன் ஈட்டிய பணம் ஒருவேளைச் சாப்பாட்டிற்குத்தான் வரும். உழைத்து தேய்ந்து போனான். விறகுக் கட்டை சுமக்க முடியாத பலவீனம் ஏற்பட்டது.
ஒரு நாள் -
வெறும் வயிற்றோடு, மாலை வரை விறகு சேகரித்தான். அதிக வருமானம் வருமே என்ற நினைப்பில் பெரிதாகக் கட்டினான்.
விறகுக் கட்டை தலையில் துாக்க முடியவில்லை. உதவ யாரும் அந்த பகுதியில் இல்லை. மனம் நொந்து, 'என்ன பிழைப்பு இது' என அலுத்துக்கொண்டான்.
செத்துப் போகலாம் போலிருந்தது.
'எமனே... எங்கே இருக்கிறாய்... என்னை கூட்டிப் போகக் கூடாதா... இதற்கு மேலும் ஏன், உலகத்துல வாழணும். சீக்கிரமா எடுத்துக்கோ...' என்று கத்தினான்.
அந்த வழியில் சென்ற எமன், 'ஏனப்பா... கூப்பிட்டாயா...' என்றான்.
எமனை நேரில் பார்த்ததும் கதிகலங்கி விட்டான் விறகுவெட்டி. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், 'நல்ல வேளை... சமயத்தில் வந்தாய்; ஒரு கை பிடித்து இந்த விறகுக் கட்டை, துாக்கி விடு...' என்றான். துாக்கி, தலை மீது வைத்தான் எமன்.
திரும்பிப் பார்க்காமல் நடந்தான் விறகுவெட்டி.
செல்லங்களே... உழைப்புக்கு தகுந்த பலன் உண்டு. எதிர்பாராத நேரத்தில் உதவிகள் கிடைக்கும்.
