
'இந்த அழகான தாமரைப் பூவை பறித்து மன்னரிடம் கொடுத்தால்... எனக்குப் பரிசும், பாராட்டும் கிடைக்கும் அல்லவா?' என்று நினைத்தான் மீனவன்.
எனவே, ஆற்றில் நீந்திச் சென்று, அந்த அழகிய, தாமரைப் பூவை பறித்தெடுத்தான். உடனே, மன்னரைக் காண அரண்மனைக்குச் சென்றான்.
மீனவன் கொண்டு வந்த தாமரைப் பூவைக் கண்ட மன்னனுக்கு வியப்பு தாளவில்லை. மன்னன் அம்மீனவனுக்கு பொன்னும், பொருளும் பரிசளித்து, அந்தத் தாமரைப் பூவை விலைக்கு வாங்கி, இளவரசனின் அறையில் அலங்காரமாக வைத்தார்.
இரவு வந்தது. அரண்மனையில் அனைவரும் உறங்கிவிட்டனர். நித்யா யாரும் அறியாதபடி தாமரைப் பூவிலிருந்து மெல்ல வெளியே வந்தாள். தான் அரண்மனையொன்றில் இருப்பதை அறிந்து வியந்தாள்.
அன்றிலிலிருந்து, இரவு முழுவதும் அரண்மனை மாடத்தில் சுற்றிச் திரிவாள் நித்யா. இளவரசனுக்காக வரும் உணவில் சிறிதளவு எடுத்து தானும் உண்பாள். பொழுது விடியும் நேரத்தில் யாரும் அறியாதபடி மீண்டும் தாமரைப் பூவினுள் சென்று மறைந்து கொள்வாள்.
இவ்வாறு சில நாட்கள் சென்றன.
ஒருநாள் இரவில் வழக்கம்போல் தாமரைப் பூவிலிருந்து நித்யா வெளியே வந்து, அரண்மனையில் சுற்றித் திரிந்தாள்.
அன்றிரவு இளவரசனுக்கும் உறக்கம் வரவில்லை. அவன் தற்செயலாக அரண்மனையில் சுற்றித் திரியும் நித்யாவை கவனித்து விட்டான். அவன் நித்யாவை நோக்கி ஓடி வந்தான்.
தன்னை இளவரசன் பார்த்துவிட்டதை அறிந்த நித்யா, தாமரைப் பூவினுள் மறைந்து கொள்ள ஓடிச் சென்றாள். என்ன அதிசயம்? மறுகணமே, தாமரைப் பூ மறைந்து போனது.
அதற்குள் இளவரசனும் ஓடிவந்து, நித்யாவை நெருங்கி, அவள் கையைப் பிடித்து, ''நீ யார்? அரண்மனைக்குள் எப்படி வந்தாய்?'' என்று கேட்டான்.
நித்யா, தான் கப்பல் பயணம் புறப்பட்டதிலிருந்து, கடல்ராஜனின் மாளிகையில் வசித்தது, தாமரைப் பூவில் அடைபட்டு அரண்மனைக்கு வந்து சேர்ந்தது உள்ளிட்ட எல்லாவற்றையும் கூறினாள்.
நித்யாவின் கதையைக் கேட்ட இளவரசன் வியப்படைந்தான். கூடவே நித்யாவின் அழகில் மயங்கி, அவள்மீது காதல் கொண்டான். இளவரசன் நித்யாவை திருமணம் செய்து கொள்ள முன் வந்தான். அவன் தன் விருப்பத்தையும் நித்யாவிடம் தெரிவித்தான்.
உடனே நித்யா, ''இளவரசே! நான் உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறேன். ஆனால், அதற்கு முன் இப்பகுதியிலுள்ள அனைத்து ஏழைகளையும் அழைத்து திருமண விருந்து அளிக்க வேண்டும்!'' என்று இளவரசனிடம் கூறினாள். இளவரசனும் அதற்குச் சம்மதித்தான்.
விருந்து நாளும் வந்தது. அறுசுவை உணவுப் பதார்த்தங்களுடன் விருந்து தொடங்கியது. விருந்திற்கு சுற்றுப் புறத்திலுள்ள அனைவரும் வந்து உணவு உண்டனர்.
நித்யா விருந்து உண்பவர்களைக் கவனித்துக் கொண்டே வந்தாள். அவர்களில் தன் பெற்றோர் வந்திருக்கின்றனரா என்று தேடினாள். ஆனால், அவளால் தன் பெற்றோரைக் கண்டுபிடிக்கவே இயலவில்லை.
விருந்து முடியும் நேரம் வந்தது. அப்போது, ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களைக் கண்டதும் நித்யாவிற்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. அவள் அந்த முதியவரையும், மூதாட்டியையும் கூர்ந்து கவனித்தாள். அவர்கள் வேறுயாரும் அல்ல... நித்யாவின் பெற்றோர்கள்தான்!
தன் பெற்றோரைப் பார்த்ததும் அவளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. மற்றொருபுறம் வேதனையாக இருந்தது. காரணம், தான் பல ஆண்டுகளாகத் தான் பெற்றோரைப் பிரிந்திருக்கிறோம் என்பது அவள் நினைவுக்கு வந்தது.
நித்யா ஓடிச் சென்று பெற்றோரை அணைத்துக் கொண்டாள். அந்த வயது முதிர்ந்த தம்பதியினரும், திருமணப் பெண் தன் மகள் நித்யா என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டனர். அவர்கள் நித்யாவை அணைத்து உச்சி முகர்ந்தனர்.
'எனது பிடிவாத குணத்தால் என் பெற்றோர்களை இத்தனை ஆண்டுகள் பிரிய நேர்ந்தது. இனி, எனது பிடிவாதத்தை அறவே ஓழிப்பேன்!' என்று உள்ளம் உருகிக் கூறினாள் நித்யா.
விருந்து அறையில் நடந்தவற்றை இளவரசனும் கவனித்தான். அவனும் அத்தம்பதியினரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றான். மறுநாளே, இளவரசனுக்கும், நித்யாவிற்கும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. நித்யாவின் பெற்றோரும் அரண்மனையிலேயே தொடர்ந்து தங்கியிருக்க, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
- சுபம்.