PUBLISHED ON : ஜூலை 22, 2023

திருச்சி மாவட்டம், மணப்பாறை, தியாகேசர் உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 6ம் வகுப்பு படித்தபோது வகுப்பு ஆசிரியராக இருந்தார் புவனேந்திரன். மாணவர்களிடம் அன்போடு பழகுவார். படிப்பில் குறை ஏற்படாமல் கவனித்து கொள்வார்.
உடன் படித்த சரவணன், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். கூலி வேலை செய்த அவன் தந்தை நோய்வாய்ப்பட்டு திடீரென காலமானார். வீடுகளில் வேலை செய்து பிழைத்த அவன் தாயும் தொடர்ந்து ஏழாம் மாதமே இறந்தார்.
திக்கற்ற நிலையில் திகைத்து நின்றவனை அழைத்து பரிவுடன், 'எனக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகிறது; குழந்தை பாக்கியம் இல்லை; உனக்கு பெற்றோர் இல்லை. உன்னை மகனாக தத்து எடுத்துக் கொள்கிறேன். தேவையான உதவிகளை செய்கிறேன்...' என ஆதரவு கரம் நீட்டினார் ஆசிரியர்.
நெகிழ்ந்தவனுக்கு முறையாக படிப்பு உதவி செய்து கவுரவமாக வாழ வகை செய்தார். எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றதும், தமிழக அரசில் தேர்வு எழுதி, உணவுப் பொருள் விநியோகத்துறையில் சேர்ந்து சிறப்பாக வாழ்கிறான்.
எனக்கு, 62 வயதாகிறது. பரிவும், பண்பும் நிறைந்த அந்த ஆசிரியர் இன்று எங்களுடன் இல்லை; அவர் பொழிந்த அன்பும், கருணையும் நினைவில் தங்கியுள்ளது.
- எஸ்.சக்திவேல், திருப்பூர்.
தொடர்புக்கு: 95668 17965
