PUBLISHED ON : ஜூலை 22, 2023

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், அரசு ஆதி திராவிட நல ஆரம்பப் பள்ளியில், 1993ல், 3ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியையாக இருந்தார் ஈஸ்வரி. சிறப்பாக பாடங்களை புரிய வைப்பார்.
ஒருநாள், பாட வேளையில் திடீரென வகுப்பிற்குள் நுழைந்த தலைமை ஆசிரியர் அ.நாராயணசாமி, 'ஆந்தைக்கு பகலில் கண் தெரியுமா...' என, ஒருவனிடம் கேட்டார்.
சுற்றும் முற்றும் பார்த்தபடி, 'தெரியும்...' என பதிலாக கூறினான். அவன் கன்னத்தை கிள்ளி, 'ஆந்தை என்ற பறவை இரவில் விழித்திருக்கும்; அதற்கு, பகலில் கண் தெரியாது...' என விளக்கியபடி புன்னகையுடன் வெளியேறினார்.
தொடர்ந்து, 'இது பற்றிய பாடத்தை ஏற்கனவே நடத்தியிருக்கிறேனே... நீ கவனிக்கவில்லையா...' என கேட்டார் வகுப்பாசிரியை. உடனே துடுக்காக, 'யார் வந்து, எந்த கேள்வி கேட்டாலும், 'தெரியாது' என விழிக்காமல், 'தெரியும்' என பதில் சொல்ல கூறினீர்களே...' என குற்றம் சாட்டுவது போல் கூறினான்.
அவன் அறியாமை கண்டு, 'நான் சொன்னதை தவறாக புரிந்துள்ளாய். கேள்வியின் தன்மையை நன்கு புரிந்து, தகுந்த பதிலை சரியாக சொல்ல பழகிக்கொள்...' என அறிவுரைத்தார். அந்த விளக்கத்தை தெளிவாக பின்பற்றிய நான் வாழ்வில் உயர்ந்தேன்.
தற்போது, என் வயது, 37; நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகத்தில் முகவராக பணியாற்றுகிறேன். யார் எந்த கேள்வி கேட்டாலும், அதற்கேற்ற பதிலை நிதானமாக கூறி புரிய வைக்கிறேன். இதை கற்றுத்தந்த அந்த ஆசிரியையை போற்றுகிறேன்.
- ரா.ராஜ்மோகன், விழுப்புரம்.
தொடர்புக்கு: 85249 06220
