PUBLISHED ON : நவ 18, 2023

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர், வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 8ம் வகுப்பு படித்த போது, ஆசிரியராக இருந்தார் அருள் பிரகாசம். மாணவர்களிடம், அன்போடு பழகுவார். படிப்பில், குறை ஏற்படாமல் கவனித்து கொள்வார்.
அன்று பாடம் நடத்தும் நேரத்தில், கரும்பலகையில் கோடு ஒன்றை வரைந்தார். பின், 'இந்த கோட்டை அழிக்காமல் சிறியதாக்க முடியுமா...' என கேட்டார். யாருக்கும் அது தெரியவில்லை; யோசித்தபடி இருந்தனர்.
ஒருவன் எழுந்து, ஆசிரியர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் நீண்ட கோடு ஒன்றை வரைந்தான். முதலில் வரைந்திருந்தது சிறிதாகி விட்டது. அவனை பாராட்டியதுடன், 'இந்த கோடுகளில் இருந்து, வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். ஒரு கோட்டை அழித்து, மற்றது உயரவில்லை; அதுபோல, யாருக்கும் இடையூறு ஏற்படும் விதமாக செயல்பட்டு உயரக் கூடாது. கடின உழைப்பு, பணிவையும், உயர்வையும் தரும்...' என்று அறிவுரைத்தார்.
என் வயது 68; செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். பரிவும், பண்பும் நிறைந்த அந்த ஆசிரியர், இன்று எங்களுடன் இல்லை. அவர் பொழிந்த அன்பும், கருணையும் நினைவுகளில் தங்கியுள்ளது.
- எஸ்.கிறிஸ்டி, சென்னை.
தொடர்புக்கு: 89396 96280
