PUBLISHED ON : மார் 10, 2017

மதுரையில் மிகச் சிறந்த மகளிர் மேல்நிலைப் பள்ளியில், படித்த பெருமைக்குரியவள். ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பதற்காக, என் பெற்றோர் தகுதி தேர்வுக்காக என்னை அழைத்து சென்றனர். 52 பேர் பங்கு பெற்றதில், ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை.
தமிழ், ஆங்கிலம், கணிதம் என, மூன்று தேர்விலும், முதல் மதிப்பெண் எடுத்து, தேர்வானதில், என் பெற்றோருக்கு அதிக மகிழ்ச்சி. ஆனால், என் கவலை எல்லாம் நான் நல்ல கறுப்பு. இதுவரை என் பெற்றோர் வேலை பார்த்த, மாநகராட்சி பள்ளியில் படித்ததால், யாரும் என்னை கேலி செய்ய மாட்டார்கள். இனி புதுபள்ளியில் எப்படி எதிர் கொள்வது...
முதல் நாள் வகுப்புக்கு சென்ற போது, எனக்கு தேர்வு நடத்திய வகுப்பாசிரியையும், விளையாட்டு ஆசிரியையும், 'வாங்க பிளாக் பியூட்டி' என்று அழைக்கவும், கொஞ்சம் திணறினேன். அதுவே எனக்கு பட்ட பெயர் ஆனது. தொடர்ந்து, நான் கறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மை முற்றிலும் நீங்கி, வகுப்பிலும், விளையாட்டிலும் முதலிடம் வகிக்க உதவியது.
என் நிறத்தை பற்றி, அதுவரை மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்வதை கேட்டு கேட்டு, மன வேதனையில் இருந்த நான், இரு ஆசிரியைகளின் அந்த சொற்களால், அன்று முதல் தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து நிற்க துவங்கினேன்.
என்னை புதிதாக்கிய அந்த இரு ஆசிரியையின் பாதங்களை இறுதி நாட்கள் வரை வணங்குவேன்.
- வே.தேவ ஜோதி, மதுரை
