PUBLISHED ON : ஏப் 09, 2022

சித்திரை முதல்நாள், விஷு என அழைக்கப்படுகிறது. அதை வரவேற்கும் விதமாக முந்தைய நாள் இரவே, தட்டில் அரிசியை பரப்பி, நவதானியம், பொன் நகை, புத்தகம், தேங்காய், கொன்றை மலர், காய், கனி வகைகளை எழிலாக அடுக்கி, பூஜை அறையில் வைப்பர். அதிகாலை அந்த பொருட்களில் கண் விழிப்பர்.
இதை, விஷு கனி காணுதல் என, வண்ணமயமாக கொண்டாடுகின்றனர். ஆண்டு துவக்கத்தில் மங்கள பொருட்களை காண்பதால், ஆக்கபூர்வமான பலன் கிடைக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.
இந்த நிகழ்வில், கொன்றை மலர் கட்டாயம் இடம்பெறும். அதற்கு தரும் முக்கியத்துவம், புராணக்கதையுடன் தொடர்புள்ளது.
அந்த கதை...
சித்திரை விஷுவுக்கு முந்தைய நாள் இரவு, கோபியருடன் விளையாடிக் கொண்டிருந்தான் கண்ணன். நீண்ட நேரமாகியும் விளையாட்டு முடியவில்லை. எல்லாவற்றிலும் கண்ணனே வென்றான்.
அவனை தோற்கடிக்கும் முயற்சியாக, 'கழுத்தில் அணிந்துள்ள மாலையை எடுத்து அங்கும் இங்குமாக வீசுங்கள். கூட்டத்தில் யார் கழுத்திலாவது விழ வேண்டும். தவறினால் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்...' என நிபந்தனை விதித்தனர் கோபியர்.
சம்மதித்த கண்ணன், அணிந்திருந்த தங்கச்சங்கிலியை வீசினான். கோபியர் தலையை சாய்த்துக்கொள்ள கீழே விழுந்தது. கைகொட்டிச் சிரித்தனர் கோபியர்.
அந்த சங்கிலியை எடுத்து, வெளியே வீசினான் கண்ணன். அது முற்றத்தில் நின்ற சரக்கொன்றை மரக்கிளையில் விழுந்தது.
மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கிய கொன்றை மலர்களிடையே, தங்கச்சங்கிலியைக் கண்ட யசோதா, 'கோபியரே... துாங்க செல்லுங்கள். அதிகாலை ஓர் அதிசயத்தை காட்டுகிறேன்...' என கூறினார்.
மறுநாள் அதிகாலை, கண்ணனை அலங்கரித்து, கொன்றை மலர்கள் சூடி காட்டினார் யசோதா. அந்த அழகில் மெய்மறந்தனர் கோபியர்.
இப்படித்தான், சித்திரை விஷு அன்று, கொன்றை மலருக்கு முக்கியத்துவம் ஏற்பட்டதாக, புராண கதை கூறுகிறது.
சரக்கொன்றையின் தாவரவியல் பெயர் காசியா பிஸ்டுலா. பபேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. தாமம், நீள்சடையோன், கொன்னை, சரக்கொன்றை, பிரணவ என்ற பெயர்களும் உண்டு.
ஆசிய நாடான தாய்லாந்தின் தேசிய மலர் கொன்றை. கேரள மாநில மலரும் அதுதான். இதை பலவிதமாக பயன்படுத்தலாம்.
சரக்கொன்றை...
* பூவையும், இளங்கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம். சர்க்கரை வியாதி மட்டுப்படும்; வயிற்றுக் கோளாறு சீராகும்
* பூவை அரைத்து காய்ச்சிய பசும்பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், உள்ளுறுப்புகள் பலம் பெறும்
* ஆவியில் வேக வைத்த பூவை, சாறு பிழிந்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்தால் வயிற்று பூச்சிகள் வெளியேறும்
* மரப்பட்டை சாயம் தயாரிக்க பயன்படுகிறது
* கனியை குரங்கு, நரி, கரடி விரும்பி உண்ணும்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரின் புராண பெயர், கொன்றை வனம். கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன்; செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர்; தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் திருக்கோவில்களில் தலவிருட்சமாக உள்ளது, கொன்றைமரம்!
கேரளா மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில், சரக்கொன்றை நடுவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதை வளர்த்து பாருங்கள்... வசிப்பிடத்துக்கு தனி அழகு சேர்க்கும்.
- எல்.மீனாம்பிகா
