PUBLISHED ON : ஜன 20, 2012

பதினான்காம் நூற்றாண்டில் நடந்தச் சம்பவம் இது. ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கப்பல் புறப்பட்டது. புதியன படைக்கவும், புதுமைகள் காணவும் துடிப்பான இருபது இளைஞர்கள் அக்கப்பலில் இருந்தனர்; தலைவன் பெயர் கொலம்பஸ். வேண்டிய உணவு தண்ணீரும் கப்பலில் சேகரித்துக் கொண்டனர். அவற்றை வழங்கும் பொறுப்பு, மாலுமிகளில் ஒருவரான ரோனால்ட்டுக்கு வழங்கப்பட்டது.
எதையாவது சாதித்து சரித்திரத்தில் பெயர் பொறிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மாலுமிகள் அனைவரும், பல நாட்கள் கூடிப்பேசி முடிவெடுத்துப் புறப்பட்டனர்.
இருபத்து நான்கு நாட்கள் சென்றன. முதலில் உற்சாகமாய் பேசிச் சிரித்து கும்மாளமிட்ட அவர்கள், ஒவ்வொருவராய் சோர்ந்து போக ஆரம்பித்தனர்.
''எங்கே பார்த்தாலும் கடல்... நிலப்பகுதியை காண முடியவில்லை... சமுத்திரத்தில் திமிங்கலங்களுக்கு இரையாகப் போகிறோம்...'' என்றான் ஒருவன்.
''என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை!'' என்றான் இன்னொருவன்.
''என் தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் பேசியிருக்கிறேன். நான் உங்களோடு வந்தது எத்தனை மடத்தனம் என்பது இப்போதுதான் புரிகிறது,'' என்று புலம்பினான் மற்றவன்.
''எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. பிறந்த உடனேயே தகப்பனை முழுங்கி விட்டவன் என்ற அவச்சொல்லை அடையப்போகிறது...'' என்று கூறி அழுதான் இன்னொருவன்.
''திடீரென்று புயல் வந்தால் எல்லாருமே பலி'' என்று ஒருவன் பயங்காட்டினான்.
''எனக்கு இப்போதுதான் திருமணமானது. வரும் போதே, ''நீங்கள் போகத்தான் வேண்டுமா? என்று அவள் அழுதாள்,'' என்று கூறி மாலுமி தேம்பினான்.
ரோனால்ட் மாலுமிகளிடம், ''எல்லா வற்றையும் விட நம் எல்லாருக்கும் உணவும், தண்ணீரும் இன்னும் 24 நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதனால், கட்டாயமாக நாம் கப்பலை ஸ்பெயினுக்குத் திருப்பியே ஆக வேண்டும்,'' என்றான்.
இதைக் கேட்ட, மாலுமிகள் எல்லாரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அனைவரும் சேர்ந்து கப்பலின் மேல் தளத்தில் இருந்த கொலம்பஸை சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறினர்.
கொலம்பஸ் அவர்கள் சொல்வதை ஏற்கவில்லை. ''உணவும், தண்ணீரும், கொண்ட லட்சியத்துக்கு குறுக்கே நிற்பதா? தோல்வி யோடு ஊர் திரும்பினால், 'வாய்ச்சொல் வீரர்கள்' என, நண்பர்கள் கேலி செய்ய மாட்டார்களா? பிறந்த அன்றே மரணம் விதிக்கப்பட்டு விடுகிறது. மரங்களும், செடி, கொடிகளும் கூட மனிதனுக்கு கனிகளும், காய்களும், மலர்களும் தருகின்றன. நம்மால் இந்த உலகத்துக்கு ஏதாவது தரவேண்டும் என்று வாய் சலிக்கப் பேசினதெல்லாம் வீண்தானா?'' என்றான்.
''பாதியில் பின்வாங்குவது பேடித்தனமல்லவா? முன் வைத்த காலை பின் வைக்கலாமா? எக்காரணம் கொண்டும் வெற்றி காணாமல் ஊர் திரும்புவதில்லை... கப்பல் முன்நோக்கியே போக வேண்டும்,'' என உறுதியாகச் சொல்லி விட்டார் கொலம்பஸ்.
இது பிடிக்காத சிலர், அவரைக் கட்டிப் போட்டனர். ஸ்பெயின் நாட்டை நோக்கி கப்பலை திருப்பி விட தீர்மானித்தனர்.
கொலம்பஸ்க்கு அந்த நிலையிலும் தோழர்கள் மேல் கோபம் வரவில்லை. விரைவாக சிந்தித்து வெறோரு முடிவுக்கு வந்தார்.
''ரொனால்ட்! தயவு கூர்ந்து என் அருகில் வா. கப்பலில் உள்ள உணவும், குடிநீரும் எத்தனை நாளைக்கு, எத்தனை பேருக்கு வரும்?'' என்று கேட்டார்.
''இருபது பேருக்கு இருபத்து நான்கு நாட்களுக்கும் வரும்...'' என்றார் ரோனால்ட்.
''அந்த இருபது பேரில் நானும் உண்டா?'' என்று கொலம்பஸ் கேட்டார்.
''என்ன இப்படி கேட்டுவிட்டாய்? நீ எங்கள் நண்பனல்லவா? அடம் பிடிக்கும் குழந்தையை அடிப்பது போலதான் உன்னை கட்டிப் போட்டுள்ளோம்,'' என வேதனையோடு கூறினான் ரோனால்ட்.
''அப்போது நான் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் ஒரு நாள் முழுவதும் இருந்தால் என்னுடைய தண்ணீரும், உணவும் பத்தொன்பது பேருக்கு மேலும் ஒருநாள் வருமல்லவா?
இந்த பசிபிக் மகா சமுத்திரத்தில் மேலும், ஒருநாள் என் கோரிக்கைப்படி கப்பல் பயணப்பட்டும். கரை எதுவும் தெரியாவிட்டால் என்னைக் கடலில் தள்ளிவிட்டு, நீங்கள் 19 பேரும் ஸ்பெயின் செல்லுங்கள்.
''இத்தனை நாள் பழகியதற்காக எனக்கு இந்த உதவி செய்யக் கூடாதா,'' என உருக்கமாக கொலம்பஸ் கேட்க, நண்பர்கள், 'ஓ' வென்று கூச்சலிட்டு, தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.
கொலம்பஸின் கட்டை அவிழ்த்தனர். ''கொலம்பஸ், உன் விருப்பப்படி கடல் பயணம் தொடரும். வெற்றி காண்போம்... அல்லது கடலில் மடிந்து புதுப்பிறவி எடுத்து நம் பணியைத் தொடர்வோம்,'' என்றனர் உணர்ச்சிவசப்பட்டு.
இருபது மணி நேரம் சென்றதும் கரை தெரிந்தது. பறவைகளின் ஒலிகள் காதை நிறைத்தன. அனைவரும் கொலம்பஸைக் கட்டிக் கொண்டு கண்ணீர் உகுத்தனர்.
இன்றைக்கு 'பணக்கார கண்டனம்' என்று நாம் போற்றும் அமெரிக்காவை அன்றைக்குக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ்தான்.
சிக்கலான சூழ்நிலையிலும் கொள்கையை மாற்றிக் கொள்ளாமல், லட்சியத்தை நோக்கி நடைபோட்ட கொலம்பஸ்க்கு சரித்திரம் இருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரும் சரித்திரம் படைக்க வேண்டும். கொண்ட கொள்கையை ஆராய்ந்து மேற்கொண்ட பின், என்ன இன்னல் வந்தாலும் கைவிடக் கூடாது.
***
