PUBLISHED ON : ஆக 16, 2019

நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார் கோவில், அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில், 1954ல், 6ம் வகுப்பு சேர்ந்தேன்.
ஏழ்மையால், புத்தகங்கள் வாங்க இயலவில்லை. ஆசிரியர் பூபதி, பழைய பாட புத்தகங்களை கொடுத்து, 'இதைப் பயன்படுத்திக் கொள்...' என்றார்; மிகவும் நன்றியுடன் பெற்றேன்.
அவருக்கு பாட புத்தகங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பதை அறிய ஆவல் இருந்தது. ஆனால், கேட்க பயம்.
சில நாட்களுக்கு பின் உண்மை தெரிந்தது...
ஒவ்வொரு ஆண்டும், தேர்வாகி செல்லும் மாணவர்களிடம், 'புத்தகங்களை தாருங்கள்...' என, வாங்கி கொள்வார். அவற்றை, ஏழை மாணவர்களுக்கு தந்து உதவுவதை வழக்கமாக கொண்டிருந்தார். என் போன்றவர்களுக்கு, இது பெரும் பயனாக அமைந்தது.
அவரது பாணியில், ஒவ்வொரு வகுப்பில் தேர்ச்சி அடைந்ததும், என் புத்தகங்களை ஏழைகளுக்கு தர துவங்கினேன்.
இப்போது, என் குழந்தைகளின் புத்தகங்களை, கொடுத்து வருகிறேன். நண்பர்கள் சிலரும், இதைப் பின்பற்றுகின்றனர்.
தற்போது என் வயது, 77. பாட புத்தகங்களை கொடுக்கும் போதெல்லாம், அந்த ஆசிரியரின் நினைவால், மனம் நிறைகிறது!
- ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை.
தொடர்புக்கு: 94449 56694
