
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், நாடார் மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 7ம் வகுப்பு படித்தபோது, கற்பதில் சுமார் ரகம் நான்.
வகுப்பு ஆசிரியர் லுார்துராஜ், 'படிப்பு தான் வரமாட்டேங்குதே... வகுப்பறையை பெருக்குவது, குடிநீர் எடுத்து வைப்பது, ஆசிரியர்களுக்கு டீ வாங்குவது போன்ற வேலைகளையாவது ஒழுங்கா செய்...' என்று கட்டளையிட்டார்.
அதை கடைபிடித்தேன். மாணவர்கள் கேலி செய்தனர். சிலர், 'வேலைக்குத்தான் லாயக்கு...' என்று இழித்துரைத்தனர். பொறுத்துக் கொண்டேன். மனங்கோணாமல் பணிகளை செய்து வந்தேன்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதும் படிப்பை நிறைவு செய்து, வெளிநாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். விற்பனையில் நல்ல பயிற்சி பெற்றேன். பின், தனியாக கடை துவங்கி வாழ்வில் உயர்ந்தேன்.
சிறு அமைப்பை ஏற்படுத்தி, பள்ளியில் செய்த வேலைகளை, சேவையாக இந்தியா முழுவதும் செய்து வருகிறேன். என்னை பாராட்டி, தினமலர் நாளிதழ், 2014ல் செய்தி வெளியிட்டது.
அதுகண்டு தொலைபேசியில் வாழ்த்திய ஆசிரியர் லுார்துராஜ், 'உன் சேவை ரொம்ப அற்புதம்...' என்றார். அதற்கு துாண்டு கோலாக இருந்த அவருக்கு என் பணிவை தெரிவித்தேன்.
தற்போது என் வயது, 46; வகுப்பறையில் கற்ற வேலையை, நாடு முழுவதும் சேவையாக செய்துவருவது நிறைவைத் தருகிறது.
- ஆர்.சங்கர் கணேஷ், விருதுநகர்.
தொடர்புக்கு: 94424 79611

