PUBLISHED ON : ஜன 07, 2011

சரியா ? தவறா ?
* முக்கால்வாசி நாடுகளில் ஏலக்காய் வாசனைக்காக காபியில் கலக்கப்படுகிறது. சரி! மத்திய கிழக்கு நாடுகளில் காபி பீன்ஸ் விதைகளுடன் ஏலக்காயும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். ஒரிஜினல் ஏலக்காய்க்கு பெயர் பெற்ற நாடு இந்தியா.
* உலகத்தில் உற்பத்தியாகும் உப்புக்களில் முக்கால்வாசி உப்பு தொழிற்துறைக்கே பயன்படுகிறது. சரி! இருபது சதவீதம் உப்பே உணவிற்காக பயன்படுகிறது. எஞ்சியுள்ள 80 சதவீதம் உப்பு பேப்பர் தயாரிப்பிற்கு உதவும் கூழ், சோப்பு மற்றும் துணி சோப்புகள், வண்ணச் சாயங்கள் மற்றும் துணிகள் தயாரிப்பில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.
* போட்ஸ்வானா ஆடு !
பெண் வெள்ளாடுக்கும், ஆண் செம்மறி ஆட்டுக்கும் இயற்கை கலப்பின முறையில் பிறந்த குட்டிதான் போட்ஸ்வானா. விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் போட்ஸ்வானா என்ற இடத்தில் இதை முதன் முதலில் கண்டுபிடித்ததால், இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் உட்பகுதி ரோமங்கள் செம்மறி ஆடு போன்றும், வெளிப்பகுதி ரோமங்கள் வெள்ளாடு போன்றும் இருக்கும். செம்மறி ஆடு போன்று உடல் வலிமையாகவும், வெள்ளாடு போன்று கால்கள் நீண்டும் காணப்படுகிறது. போட்ஸ்வானா ஆட்டுக் குட்டிகள் மற்ற செம்மறி ஆடு, வெள்ளாட்டுக் குட்டிகளை விட வேகமாக வளர்கிறது. ஆப்ரிக்க கால்நடை பண்ணையாளர், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை பல நூற்றாண்டுகளாக ஒரே வேலியில் அடைத்து பாதுகாக்கின்றனர். ஆனால், இவைகளுக்கிடையேயான கலப்பினக் குட்டிகள் தற்போதுதான் பிறந்துள்ளன.
* அமெரிக்காவை சேர்ந்த 26 வயது இளைஞன் ஒரு மளிகை கடைக்குள் புகுந்து பொருட்களை வாங்குவதுபோல் பாவனை செய்து, பொருட்களை திருடிக் கொண்டு வந்து ஒரு கட்டடத்தில் மறைத்து வைத்திருந்தான். அதிர்ஷ்ட வசமாக அந்த பில்டிங் அப்போதுதான், போலீஸ் ஸ்டேஷனாக மாறியது என்ற விஷயம் திருடனுக்குத் தெரியாது. அப்புறம் என்ன இவர் திருடி வந்த பொருட்களை எடுக்க வந்தபோது அப்படியே 'லபக்'கினர் போலீசார். பிறகு என்ன சிறை வாசம்தான்.
