PUBLISHED ON : ஆக 28, 2021

சீத்தாமரம், வெப்ப மண்டலப் பகுதியில் எளிதாக வளரும். இதன் பழம் பச்சை நிறமானது; சதை, வெண்மை நிறத்துடன், மென்மையாக, இனிப்புச்சுவையுடன் இருக்கும். இதனுள் காணப்படும் விதைகள், கறுப்பு நிறத்தில் மின்னும். அவை நஞ்சுத்தன்மை வாய்ந்தவை. இதனால், பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை.
சீத்தா பழம்...
* ஜீரண சக்தியை மேம்படுத்தும்
* ஜீரண வழித்தட ஆரோக்கியத்தை பேணும்
* மலச்சிக்கலை தடுக்கும்
* வாந்தி பேதி, வயிற்றுக்கடுப்பு, கிறுகிறுப்பு, தலைச்சுற்றலை குணப்படுத்தும்
* சீத்தா காயை உலர்த்தி, பொடியாக்கி தலையில் தேய்த்தால் பேன் தொல்லை நீங்கும்
* சீத்தாப்பழ விதை பொடியோடு, கடலை மாவு கலந்து, எலுமிச்சை சாறில் குழைத்து, தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வர முடி உதிர்வது குறையும்.
இந்த பழம், இரும்பு, பாஸ்பரஸ், கால்ஷியம், தாமிர சத்துகளை உள்ளடக்கியது. ஆரோக்கியமான தோலுக்கு தேவைப்படும், 'வைட்டமின் - ஏ' என்ற சத்து நிரம்பவே உள்ளது. பார்வை திறன் மேம்படவும் சீத்தாப்பழம் உதவும். இதில் உள்ள மெக்னீஷியம் சத்து, இதய அடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும்.
குறைவான கொழுப்புச்சத்தை உள்ளடக்கியது இந்த பழம். இதன் சதையை பிழிந்தெடுத்து, பாலுக்குப் பதில் பானமாக பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.
இதன் மரப்பட்டையில் துவர்ப்பு சுவை அதிகம்; இதில் டானின் அமிலம் உள்ளது. எனவே, மருந்துகள் செய்ய பயன்படுகிறது.
