தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏமாற்றிய முயல்!

ஏமாற்றிய முயல்!

ஏமாற்றிய முயல்!


PUBLISHED ON : ஜூலை 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் சின்னசாமி என்பவன் தன் நிலத்தில் பெரிய தோட்டம் அமைத்து காய்கறிகளைப் பயிரிட்டு வந்தான். நாள்தோறும் அவனுக்குத் தெரியாமல் முயல் ஒன்று உள்ளே நுழைந்து, கொழுந்து இலைகளைத் தின்று சென்றது.

எப்படியாவது அந்த முயலைப் பிடிக்க வேண்டும் என்று பல வகைகளில் முயற்சி செய்தான். ஆனால், அவனால் பிடிக்க முடியவில்லை.

'அந்த முயல் ஒழிந்தால்தான் தன் தோட்டத்தைக் காப்பாற்ற முடியும். தனக்கும் நிம்மதி ஏற்படும். என்ன செய்வது' என்று சிந்தித்தான்.

அரசனிடம் சென்ற சின்னசாமி, ''அரசே! என் நிலத்தில் அருமையான தோட்டம் அமைத்துள்ளேன். நாள்தோறும் ஒரு முயல் அங்கு நுழைந்து எனக்கு தொல்லை தருகிறது. அந்த முயலைப் பிடிக்க நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்,'' என்று வேண்டினான்.

''ஒரு முயலைப் பிடிக்க உன்னால் முடிய வில்லையா?'' என்று கேட்டான் அரசன்.

''அரசே! என் தோட்டத்தைச் சுற்றி பாதுகாப்பாக வேலி போட்டு இருக்கிறேன். அப்படி இருந்தும் தந்திரசாலியான அந்த முயல் எப்படியோ உள்ளே நுழைந்து விடுகிறது. பொறிகளையும் வைத்துப் பார்த்து விட்டேன். ஒன்றிலும் அது சிக்கவில்லை. அதனால்தான் உங்களிடம் வந்தேன்,'' என்றான் சின்னசாமி.

''கவலைப்படாதே! அந்த முயல் இறந்து விட்டது என்றே நினைத்துக் கொள். வேட்டைக்காரர்களோடும், வேட்டை நாய்களோடும் நாளை நானே அந்த முயலை வேட்டையாட வருகிறேன். அந்த முயலின் திறமை என் வேட்டை நாய்களிடம் செல்லாது. மகிழ்ச்சியோடு போ,'' என்றான் அரசன்.

வரப்போகும் பெரிய இழப்பை உணராத சின்னசாமி வீடு திரும்பினான்.

மறுநாள் படை வீரர்கள் சூழ வேட்டைக்காரர்களோடும், வேட்டை நாய்களோடும் ஆரவாரமாகக் குதிரையில் அங்கு வந்தான் அரசன். எல்லாருக்கும் விருந்து அளித்தான் தோட்டக்காரன்.

''அரசே! நீங்கள் நல்ல நேரத்தில் வந்தீர்கள். அந்த முயல் என் தோட்டத்தில் எங்கோ மறைந்து இருக்கும் நேரம்தான் இது,'' என்றான் சின்னசாமி.

வேட்டைக்குத் தயாரானான் அரசன். முயல் தப்பித்து ஓடி விடாதபடி தோட்டத்தைச் சூழ்ந்து நின்றனர் வேட்டைக்காரர்கள். வீரர்கள் குதிரையில் அமர்ந்தனர். கொம்புகள், பறை போன்றவை பேரோசையோடு முழங்கின. வேட்டை நாய்கள் பயங்கரமாக குரைத்தன.

சத்தத்தைக் கேட்டு அஞ்சியது முயல். புதர் மறைவிலிருந்து வேலியை நோக்கி ஓடியது.

குதிரையில் இருந்த அரசன், ''அதோ முயல் ஓடுகிறது. விடாதீர்கள்! பிடியுங்கள்,'' என்று கத்தியபடி முயலை விரட்டினான்.

வேட்டை நாய்கள் அவிழ்த்து விடப்பட்டன. வேட்டைக்காரர்களும், வீரர்களும் முயலைத் துரத்தினர்.

வேலி வழியே தப்பிக்க வழி இல்லாத தால் அந்த முயல் தோட்டத்திற்கு உள்ளேயே ஓடத் துவங்கியது.

எல்லாரும் அதைத் துரத்தினர். வளர்ந்திருந்த காய்கறிச் செடிகள் அனைத்தும் குதிரைகள், வேட்டைக்காரர்களின் கால்களில் சிக்கி நாசமாயின. வேலியும் பல இடங்களில் சின்னாபின்னம் ஆக்கப்பட்டது.

நீண்ட நேரம் அவர்களை ஏமாற்றிய முயல் கடைசியில் சிக்கியது.

வேட்டையில் பிடித்த முயலைத் தோட்டக்காரனிடம் நீட்டினான் அரசன்.

''மீண்டும் இப்படி ஏதேனும் ஒரு முயல் உன் தோட்டத்திற்குள் நுழைந்து தொல்லை கொடுத்தால் தயங்காமல் என்னிடம் சொல்,'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

பாழ்பட்டுக் கிடந்த தோட்டத்தை வேதனையோடு பார்த்தான் அவன். மீண்டும் அதைப் பழைய நிலைக்குக் கொண்டு வரப் பல மாதங்கள் பிடிக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது.

'என் முட்டாள்தனத்தால்தான் எனக்கு இந்த இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு முயல் என்ன, ஓராயிரம் முயல்கள் வந்திருந்தாலும் என் தோட்டம் இப்படி நாசமாகி இருக்காது. சின்னஞ்சிறு செயலுக்குப் பெரியவர்களை உதவிக்கு அழைத்தேனே... எனக்கு இந்தத் தண்டனை வேண்டும்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் சின்னசாமி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us