தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆசை... ஆசை...!

ஆசை... ஆசை...!

ஆசை... ஆசை...!


PUBLISHED ON : நவ 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரக்கிளையில் அமர்ந்தபடி கூ... கூ... என்று கூவிக் கொண்டிருந்தது அந்தக் குயில். அப்போது அந்தப் பக்கமாக வாத்து ஒன்று வந்து கொண்டிருந்தது. மரக்கிளையில் குயிலின் சத்தத்தைக் கேட்டதும் அண்ணாந்து பார்த்தது வாத்து. தத்தித் தத்தி மரத்தடியின் அருகே சென்றது வாத்து.

'இந்தக் குயில் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்தபடி கூவுகிறதே... நாமும் இதனைப் போன்று இந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஏறிடவேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தது.

மரக்கிளையில் அமர்ந்திருந்த குயிலோ மரத்தடியில் வாத்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது.

''வாத்தே, எதற்காக இப்படி இந்த மரத்தடியில் நின்றபடி அண்ணாந்து என்னைப் பார்க்கிறாய். உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டது குயில்.

''குயிலே, குயிலே என் ஆசையை யாரிடம் தெரிவிப்பது என்று யோசனை செய்து கொண்டிருந்தேன். நல்லவேளையாக நீ இதனைப் பற்றிக் கேட்டாய். உன்னிடமே என்னுடைய யோசனையைத் தெரிவிக் கிறேன்,'' என்றது வாத்து.

''வாத்தே, உனக்கு ஏற்பட்டிருக்கிற ஆசையென்னவோ! அதனை நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டது குயில்.

''குயிலே! எனக்கு உன்னைப் போன்று உயர்ந்த மரக்கிளையில் நின்றபடி பாட்டுப் பாட வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. நீதான் எப்படியாவது என்னுடைய ஆசையினை நிறைவேற்றி வைக்க வேண்டும்,'' என்றது வாத்து.

''வாத்தே, உன்னுடைய யோசனையானது மிகவும் விசித்திரமாக இருக்கிறதே! உனது ஆசையை நானெப்படி நிறைவேற்றி வைக்க முடியும்? இதெல்லாம் நடக்கிற காரியமா? இது ஒருபோதும் நடைபெறாது. அதனால் உனக்கு ஏற்பட்டிருக்கும் ஆசையை தவிர்த்திடு,'' என்றது குயில்.

''குயிலே, நான் மரத்தில் ஏறுவதற்கு ஏதாவது யோசனை கூறுவாய் என்று எதிர்பார்த்தால், என் முயற்சியினையே கைவிட்டு விடும்படியாகக் கூறுகிறாயே,'' என்று கேட்டது வாத்து.

''வாத்தே! உன்னுடைய முயற்சி விசித்திரமாக இருக்கிறதே! ஒருவருக்கு முயற்சி தேவைதான். ஆனால், அந்த முயற்சியானது நிறைவேறும் முயற்சியாக இருக்க வேண்டும். நிறைவேறாத முயற்சியினால் ஒருவருக்கு எந்தப் பலனும் ஏற்படாது. இதனை நீ நன்றாக உணர்ந்து கொள்,'' என்றது குயில்.

''குயிலே! என் முயற்சி பலன் அளிக்கும் முயற்சியோ அல்லது பலனளிக்காத முயற்சியோ, அதனைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. நிச்சயமாக நான் மரம் ஏறிவிடுவேன் என்ற முடிவோடு இருக்கிறேன்,'' என்றது வாத்து.

''வாத்தே, நான் இயற்கையிலேயே இறக்கைகளோடு பறக்கும் சக்தியைப் பெற்றிருக்கிறேன். அதனால் மரம் விட்டு மரம் பறந்து செல்கிறேன். ஆனால், நீயோ அவ்வாறில்லை. உனக்கு இயற்கை யிலேயே பறக்கும் சக்தியானது இல்லை. நீ கனமான உடலோடு காணப்படுகிறாய். எனவே, உன்னால் உயரமான இடத்தில் எல்லாம் பறந்து செல்ல முடியாது,'' என்றது குயில்.

'இனிமேல் நாம் குயிலிடம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தால் அது தொடர்ந்து இதனைத்தான் கூறிக் கொண்டிருக்கும். அதனால் நாமே மரம் ஏற முயற்சிக்க வேண்டும்' என்று முடிவு செய்தது வாத்து.

மரத்தின் மேலே எப்படி ஏறுவது என்று யோசனை செய்து கொண்டிருந்தது வாத்து. அப்போது அந்தப் பக்கமாக குரங்கு ஒன்று வந்தது.

வாத்து உடனே அந்தக் குரங்கை அழைத்தது.

''குரங்கே, நீ என்னைத் தூக்கிச் சென்று மரக்கிளையின் உச்சியில் அமர வைக்கிறாயா?'' என்று கேட்டது வாத்து.

குரங்கும் வாத்தைப் பிடித்துக் கொண்டே மரத்தின் மேலே ஏறியது. உயர்ந்த மரக் கிளையில் வாத்தை அமர வைத்தது. மரத்தில் உயரமான மரக்கிளையில் அமர்ந்த மகிழ்ச்சியில் வாத்து ''பாக்... பாக்...'' என்று கத்தத் தொடங்கியது.

அதனைக் கேட்ட குரங்கோ எரிச்சல் அடைந்தது.

'வாத்து நம்மைத்தான் ஏளனம் செய்கிறது' என்று மனதுள் நினைத்தது.

உடனே வாத்தின் இறக்கைகளைப் பிய்த்து எறிந்தது. அதன் பின்னர் மரத்தை விட்டு இறங்கிச் சென்றது.

''குரங்கே, குரங்கே என் இறக்கையைப் பிய்த்து விட்டாயே! என்னை விட்டு விட்டு நீ மட்டும் மரத்தை விட்டு இறங்குகிறாயே! என்னையும் கீழே இறக்கி விடு,'' என்றது வாத்து.

வாத்தின் பேச்சைக் குரங்கு தன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அது வேகமாக மரத்தை விட்டுக் கீழே இறங்கியது.

வாத்தோ எப்படிக் கீழே இறங்குவது என்று தெரியாமல் இறக்கைகளை இழந்தபடி வலியால் துடித்தது. இதனையெல்லாம் மரக்கிளையில் ஓர் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த குயில் வாத்தை பார்த்தது.

''வாத்தே, எனது அறிவுரையை நீ கேட்டிருந்தால் உனக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காது,'' என்று கூறியபடி பறந்து சென்றது.

வேண்டாத ஆசையால் ஏற்பட்ட விபரீதத்தை எண்ணி அழுதது வாத்து.

பட்டூஸ்.... உங்களது வேண்டாத ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், பெரியவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us