PUBLISHED ON : அக் 07, 2016

நான், +1 படிக்கும் போது, விவேகானந்தா கேந்திரா நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றேன். அதனால், நானும், என் வகுப்புத் தோழியும் எங்கள் பள்ளி கணினி ஆசிரியையுடன், நான்கு நாட்கள், கன்னியாகுமரியில் நடந்த, 'கேம்ப்'பில் கலந்து கொண்டோம். தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவியர், கலந்து கொண்ட முகாம் அது. புதிதாக நிறைய தோழிகள் கிடைத்தனர். அந்த நான்கு நாட்களும் தியானம், விளையாட்டு, போட்டி என பலவித அனுபவங்கள் கிடைத்தன.
ஒருநாள், மதிய உணவிற்குப் பின், நானும் பிற பள்ளித் தோழிகளும், அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அச்சமயம், என் பள்ளித் தோழியை மட்டும் காணவில்லை. தோழி ஒருத்தி அருகிலிருந்த மூட்டையைச் சுட்டிக் காட்டி, 'நமக்கு உட்காரவே இடம் இல்லை. இந்த அழுக்கு மூட்டையை யார் நம்மிடத்தில் வைத்தது?' என கேட்டாள்.
உடனே, நாங்கள் அனைவரும் அம்மூட்டையை, பிரித்துப் பார்க்க எண்ணி அதை இழுத்தோம். அப்போது தான் தெரிந்தது அது அழுக்கு மூட்டையல்ல. நாங்கள் தேடிய என் பள்ளித் தோழிதான் என்று.
அவள் கை,கால்களை முடக்கி போர்வையால் போர்த்தியபடி ஒரு மூட்டை போல் உறங்கியிருக்கிறாள் என்பது. அன்றிலிருந்து நாங்கள் அனைவரும் அவளை, 'அழுக்கு மூட்டை' என்றே அழைப்போம். இன்றும், விவேகானந்தா கேந்திரா என்றால், எனக்கு முதலில் நினைவிற்கு வருவது, 'அழுக்கு மூட்டை' சம்பவம் தான்.
- முனீஸ்மாலா, சிவகாசி
