PUBLISHED ON : ஆக 30, 2013

கல்கத்தாவில் ஆதரவற்ற பிள்ளைகளை வளர்த்து வரும் சிசுபவன். ஒரு சிறுவனுக்கு ஆதரவாக யாரும் இல்லை. அவனை வளர்த்த மூதாட்டி தனது முடியாத நிலையில் சிசு பவனுக்கு அழைத்து வந்தார். அங்கே இருந்த சகோதரிகள் அவன் படித்து இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டனர். அவனைப் பார்த்து “நீ வளர்ந்து பெரியவனான பிறகு என்னவாக விரும்புகிறாய்’ என்று கேட்டனர்.
அவன் சொன்னான்:
'நான் அன்னை தெரசாவாகப் போகிறேன்' என்று. அவனால் அதுபோன்று பின்னாளில் ஆக முடியவில்லை. ஆனால், அவன் இப்போது பாதிரியாராகப் பணிபுரிகிறார். அன்னை தெரசா போன்றும், பலருக்கும் உதவி செய்து வருகிறார். டாக்டர், இன்ஜினியர், அரசுப் பணி இப்படி எவ்வளவோ இருக்க அவன் தொண்டு பணி செய்ய தூண்டுதலாய் அமைந்ததற்கு 'அன்னை தெரசா'தானே காரணம்.
உண்மையான தொண்டு உலகத்தையே உலுக்கி விட்டபோது, இந்த சிறுவன் எம்மாத் திரம். ஆனால், வயதில் குறைந்த சிறுவனையே கவர வேண்டும் என்றால் அன்னையின் அன்பு பணி அளவிட முடியாததாக இருந்திருக்க வேண்டும். நடிப்பு, போலி, விளம்பரம், எதுவு மில்லாத அன்னை தெரசாவின் தியாகத் தொண்டு அளப்பரியதன்றோ!
அன்னையின் பிறப்பு!
'ஸ்கோப்ஜே' அல்பேனிய அரசின் சிறு பகுதி. அமைதியின் சரணாலயம். அன்பின் எழில் நகரம். 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட தடாகத்தில்தான் அன்னை தெரசாள் என்ற ஆன்மீகத் தொண்டுமலர் பூத்தது.
யுகோஸ்லேவியா, ஏட்ரியாடிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள நாடு. யுகோஸ்லேவியாவிற்கு வடக்கே டினாரிக்ஸ், தெற்கே வளைகுடா மலையடி வாரத்தில் பெரிய பெரிய மரங்கள். அண்ணாந்து பார்த்தால், மரங்களின் உச்சியை பார்க்கக் கூட முடியாது அவ்வளவு உயரமான மரங்கள். புவியியல் ரீதியாக அழகான இந்த நாட்டில் தான் புவி முழுவதும் தன் சேவையால் அன்பின் அழகினை பரப்பி புகழ் பெற்ற அந்த பெண் பிறந்தாள்.
அந்த பெண்ணுக்கு அப்பா; நிக்கோலாஸ், அம்மா; டிரனாபில் பெர்னாய்.
ஆக்னஸ் கோன்ஷா பேஜாகியூ என்று அப்பெண்ணுக்கு பெயரிட்டனர் பெற்றோர். ஆக்னஸ் கோன்ஷா என்றால் அல்பேனிய மொழியில் 'மலர் மொட்டு' என்று பொருள். பேஜாகியூ என்பது அவர்களது குடும்ப பெயர். ஆக்னஸ் கடைக்குட்டி, பெற்றவர் களுக்கு அவளே செல்லக்குட்டி, ஆக்னஸ் படிப்பிலோ படுச்சுட்டி. ஆக்னஸ் அப்பா சிறிய அளவில் மளிகை கடை ஒன்று நடத்தி வந்தார்.
ஆக்னஸ் 1910ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பிறந்தார். ஆக்னஸின் அம்மா மிகுந்த இறைப்பற்று கொண்டவர். கிறிஸ்துவ சமயத்தை சேர்ந்த இக்குடும்பம் இயேசுநாதரின் போதனைகளின் படி வாழ்ந்து வந்த குடும்பம். அம்மா தன் மூன்று குழந்தைகளுக்கும் பைபிள் கற்று கொடுத்தார். தினமும் மாதாகோவில் சென்று பிரார்த்தனை செய்ய சொல்லி கொடுத்தார்.
ஆக்னஸின் அம்மா அறுசுவை உணவு அளித்தார். அதோடு, 'பிறரை நேசி' என்ற ஆன்மீக உணர்வையும் ஊட்டினார்.
ஆக்னஸ் அன்னையானதற்கு காரணமான அவரின் அம்மா!
1914ம் ஆண்டு, 'முதல் உலகப்போர் மூண்டது. போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று யுகோஸ்லேவியா. பஞ்சமும், பிணியும், பசியும் தலைவிரித்து ஆடின.
ஆக்னஸின் பெற்றோரும் அவதிப்பட்டனர். அதன் பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆக்னஸின் தந்தை மறைந்தார்.
குடும்பம் கடுமையாக தத்தளித்தது. ஆனாலும் அம்மாவின் உழைப்பினாலும், மன உறுதியினாலும் அவர்கள் குடும்பம் ஓரளவு உயிர் பெற்றது. அம்மா தினமும் தன் குழந்தைகளுடன் பிரார்த்தனையில் ஈடுபடுவார்.
அம்மா துணிக்கடை ஒன்றை தொடங்கி நடத்தினார். பூ வேலைகளை அழகாக துணிகளில் செய்து பார்ப்போரை பரவசப் படுத்தினார். பூவேலைகளுடன் கூடிய ஆடைகள் ஆக்னஸை கவர்ந்தன. தினமும் ஒரு புத்தாடை அணிந்து மகிழ ஆக்னஸ் ஆர்வம் காட்டினாள். அப்பா இல்லாத குறை தெரியாமல் பிள்ளைகளை வளர்த்தார் அம்மா. பள்ளிக்கூடங்கள் என்பது தாய்ப்பால் போல் உரமும், உறுதியும் தரக் கூடியது. அதோடு முக்கியமாய் பாடங்களையும், ஒழுக்கங்களையும் கற்று தருவது. அவற்றை தொடர்ந்து இல்லங்களிலும் இப்பயிற்சி தொடரப்பட வேண்டும். இதை நன்கு தெரிந்து வைத்திருந்தார் ஆக்னஸின் அம்மா.
ஆக்னஸ் பண்பாடும், ஒழுக்கமும் நிரம்பப் பெற்றவளாக வளர்ந்தாள். ஆக்னஸின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்து வந்தார் அவள் அம்மா. ஆக்னஸ் தன்னுடன் படிக்கும் தோழிகள் அனைவரிடமும் சிரித்து பேசி நட்பாய் பழகி வந்தாள். தீயவர்களின் நட்பை நீக்க வேண்டும் நல்லவர்களின் நட்பை நாட வேண்டும் என்ற அம்மாவின் அறிவுரைப்படி ஆக்னஸ் நல்ல தோழிகளுடன் மட்டுமே உரையாடினாள், உறவாடினாள்.
பள்ளிப்பருவம் கற்பனை உலகில் பவனிவரும் பருவம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் லட்சியம் இருக்கும். எழுத்து, பேச்சு, ஆடல், பாடல், கலை, விளையாட்டு என பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். ஆக்னஸின் லட்சியம் சற்று வித்தியாசமாக விளங்கியது. அம்மா சொல்லி தந்த பண்பாடு, அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற திசையில் அவளை திருப்பிற்று. துன்பம், வறுமை முதலியவற்றின் கொடுமைகளை கண்டு ஆக்னஸ் மனம் வருந்தினாள். எனவே, ஏழை எளியவர்களுக்கு என்றும் சேவை செய்வதே தனது லட்சியம் என கொண்டாள்.
பன்னிரண்டு வயதில் பளிச்சென்று இப்படி ஓர் உயரிய நோக்கு வர காரணம் இருந்தது. அது ஆக்னஸின் அம்மாவின் வளர்ப்பு. அன்னை தெரசாவின் அன்பு பணியை நாமும் செய்ய முயல்வோம்!
***
