PUBLISHED ON : மார் 19, 2022

உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் படித்துக் கொண்டிருந்த என்னை, 2002ல், 10ம் வகுப்பில் சேர்க்க மதுரை அழைத்து வந்தனர், பெற்றோர். சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில் சேர்க்க மறுத்துவிட்டதால், மதுரை, ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியையை அணுகினோம்.
அவரோ, 'ஹிந்தியும், சமஸ்கிருதமும் படித்திருக்கிறாய்; அரசு பள்ளியில், தமிழ் படிப்பது கட்டாயம். எனவே தமிழ் ஆசிரியை ராமேஸ்வரியை சந்தித்து பேசு... அவர் சம்மதித்தால், 'அட்மிஷன்' தருகிறேன்...' என்றார்.
அவரை சந்தித்தபோது, 9ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் சில பகுதிகளைத் தந்து, 'நான்கு நாட்களுக்குள் படித்து வா... பின் தேர்வு வைக்கிறேன்...' என்றார்.
ஏற்கனவே, 5ம் வகுப்பு வரை தமிழ் கற்றிருந்ததால் நம்பிக்கையுடன் முயன்றேன். மனம் ஊன்றி படித்து தேறிய என்னை பாராட்டி, அவரது வகுப்பிலே சேர்த்துக் கொண்டார். அவர் ஊட்டிய உற்சாகத்தால், இறுதி தேர்வில் தமிழ் பாடத்தில் முதன்மை மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.
இப்போது, என் வயது, 35; பெங்களூருவில், 'நெட்வொர்க்கிங்' பொறியாளராக பணிபுரிகிறேன். தமிழ் மீது பற்று, தீராக் காதலை உருவாக்கிய அந்த ஆசிரியையும், முன்னேற்றத்திற்கு துணை நின்ற அந்த பள்ளியையும் நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- ஆர்.மானசா, பெங்களூரு
