PUBLISHED ON : நவ 14, 2020

நாட்டில் அமைதியாக வாழ்ந்து வந்தார் ஒரு துறவி. கூட்டம் கூட்டமாக வந்த மக்கள், அவரை வணங்கி சென்றனர்.
துறவிக்கு கிடைத்த மரியாதையை கண்டு, அந்த நாட்டு படைத்தளபதியால் சகிக்க முடியவில்லை.
ஒரு நாள் மாலை -
துறவியை சந்தித்தார் படைத்தளபதி. மனதில் இருந்த வருத்தத்தை கொட்டியபடி, 'அதிக அளவில் மக்கள் உங்களுக்கு மதிப்பு தருகின்றனரே... இது நியாமா...' என கேட்டார்.
புன்முறுவல் பூத்தார் துறவி. பின், அழகிய தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். பலவகை வண்ண மலர்கள் பூத்திருந்தன. வானம் சூரிய ஒளியால் மிளிர்ந்தது.
அவற்றை பார்த்தபடி வந்தார் படைத்தளபதி. அவரிடம், 'அன்பரே... ரோஜாப்பூ எப்போதாவது சூரியனைப் போல் ஒளி வீச முடியவில்லையே என வருந்தியது உண்டா அல்லது சூரியன் தான், பூவைப்போல் இனிய மணம் இல்லையே என வருந்தியது உண்டா...' என்று கேட்டார் துறவி.
அமைதியாக நின்று நிதானமாக யோசித்தார் தளபதி. மனம் நெகிழ்ந்தது.
'அடுத்தவருடன் ஒப்பிட்டு, அமைதியைக் கெடுத்து கொள்ளக்கூடாது. இந்த நாட்டு மன்னரிடம் உமக்கு உள்ளது போன்ற மதிப்பு, வேறு யாருக்காவது உண்டா...' என்று கேட்டார்.
கண்கலங்கிய படைத்தளபதி, 'மன்னியுங்கள்... உங்கள் அறிவுரை மனக் கண்களை திறந்து விட்டது...' என்று, அமைதியுடன் விடை பெற்றார்.
துளிர்களே... அடுத்தவருடன் ஒப்பிட்டு மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ளாதீர்!
எஸ்.பிரேமாவதி
