PUBLISHED ON : மே 06, 2023

வசந்தபுரத்தில் வசித்து வந்தனர் மாதவன், காமாட்சி தம்பதியர். மனைவி மீது கொள்ளைப்பிரியம் வைத்திருந்தான் மாதவன். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்தாள் மனைவி.
கணவன் என்ன செய்தாலும், குறை கண்டறிந்து திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை திட்டு வாங்கும் போது சோர்ந்து விடுவான்; அடுத்த முறை எப்படியாவது நல்ல பெயரெடுக்க முயற்சி மேற்கொள்வான்.
அன்று -
வீட்டுக்குள் வேலை செய்து கொண்டிருந்தாள் காமாட்சி. தெருவில் குழந்தைகளின் கூச்சல் சத்தம் கேட்டு, வாசலுக்கு ஓடி வந்து பார்த்தாள்.
அந்தரத்தில் பறந்து குட்டிக்கரணம் அடித்து, வேடிக்கை காட்டியபடி இருந்தான் ஒருவன். அதைப் பார்த்து, ஊரே கூடி கைத்தட்டி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அவன் பறந்தபடி, மறைந்தான். மக்களும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.
அலுவலக வேலை முடிந்து, இரவு வீடு திரும்பிய மாதவனிடம், ''தெருவுல ஒருவன் வேடிக்கை நிகழ்த்தினான். அந்தரத்தில் பறந்து, வித்தையெல்லாம் செஞ்சு காட்டினான்; நீங்களும் இருக்கீங்களே...'' என்றாள் காமாட்சி.
''வித்தைய காட்டியதே நான் தான்; வித்தைய ஒருத்தருகிட்ட கஷ்டப்பட்டு கத்துக்கிட்டேன்; எல்லாம் உனக்காக தான்...''
மகிழ்ச்சியுடன் கூறினான் மாதவன்.
''அதானே பார்த்தேன்... நேரா பறக்காமல், சுருண்டு சுருண்டு பறக்கும் போதே சந்தேகப்பட்டேன். நீங்களா தான் இருக்கும்; எதையும் ஒழுங்கா கத்துக்க தெரியாதா...'' என இழித்துரைத்தாள்.
'நாய் வாலை நிமிர்த்த முடியாது போல' என்று எண்ணி அகன்றான் மாதவன்.
குழந்தைகளே... பிறர் செயலில் குற்றம் காணாமல் பாராட்டும் குணத்தை வளர்த்து கொள்ளுங்கள்!
- கே.எம்.பாரூக்
