PUBLISHED ON : அக் 08, 2010

ஹாலந்து நாட்டுக் கடற்கரையில் இருந்த சிற்றூர் அது. அங்கிருந்த எல்லாரும் மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். அவ்வூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சேவை அமைப்பு ஒன்றை உருவாக்கினர். கடலில் சிக்கித் தவிப்பவர்களை காப்பாற்றுவதே அந்த அமைப்பின் இன்றியமையாத நோக்கமாக இருந்தது.
ஒருநாள் கடுமையான புயலும், சூறாவளியும் அந்த ஊரையே அலைக்கழித்துக் கொண்டிருந்தது. பெரிய பெரிய அலைகள் சீற்றத்துடன் கரையில் மோதிக் கொண்டிருந்தன. அப்போது படகு ஒன்று அந்தப் புயலில் சிக்கித் தவித்தது.
அதில் இருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி கரைக்குச் செய்தி அனுப்பினர். இதை அறிந்த சேவை அமைப்பின் தலைவன் அபாய மணியை அடித்தான். மணியோசை கேட்டு இளைஞர்களும் ஊர் மக்களும் கடற்கரையில் கூடினர். அந்த இளைஞர்களில் சிலர் ஒரு படகில் ஏறினர். சீறிப் பாய்ந்த அலைகளுக்கு அஞ்சாமல் கடலுக்குள் சென்றனர்.
கரையில் இருந்தவர்கள் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். சில மணி நேரத்திற்குப் பிறகு, அந்தப் படகு கரையை அடைந்தது. படகின் தலைவன், ''கடலில் சிக்கித் தவித்தவர்களை எல்லாம் படகில் ஏற்ற இடம் இல்லை. ஒரே ஒருவர் மட்டும் அந்தப் படகில் உள்ளார். அவரையும் ஏற்றி இருந்தால் எங்களால் பாதுகாப்பாக வந்திருக்க முடியாது. நாங்கள் அனைவரும் களைப்படைந்து விட்டோம். வேறு யாராவது சென்று அவரை மீட்டு வாருங்கள்!'' என்றான்.
கரையில் இருந்த இளைஞர்களில் ஒருவன், ''நான் சென்று அவரை மீட்டு வருகிறேன். எனக்குத் துணையாக வருபவர்கள் வாருங்கள்!'' என்றான்.
அவனுக்குத் துணையாகச் செல்ல சில இளைஞர்கள் முன் வந்தனர். இதைப் பார்த்த அந்த இளைஞனின் தாய், ''மகனே! நான் சொல்வதைக் கேள். உயிருக்கு ஆபத்தான இந்த முயற்சியில் இறங்காதே. உன் தந்தை பத்தாண்டுகளுக்கு முன் கப்பல் மூழ்கி இறந்து போனார். சில மாதங்களுக்கு முன் உன் அண்ணனும் கடலில் காணாமல் போய் விட்டான். எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு நீதான். நீயும் போய் விட்டால் நான் என்ன செய்வேன்!'' என்று புலம்பினாள்.
''அம்மா! தன்னலம் அற்ற சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. என்னைத் தடுக்காதீர்கள்!'' என்ற அவன் மற்றவர்களுடன் படகில் ஏறிப் புறப்பட்டான். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. கண்ணீர் மல்கக் கரையிலேயே காத்திருந்தாள் அவன் தாய். அந்தப் படகு கரையை நெருங்கியது.
அதில் இருந்த அவள் மகன், ''அம்மா! படகில் தவித்துக் கொண்டிருந்தவரைக் காப்பாற்றிவிட்டேன். அவன் வேறு யாரும் அல்ல. என் அண்ணன்தான். சேவை செய்ய நான் தயங்கி இருந்தால் அண்ணனை இழந்து இருப்பேன்!'' என்று உரத்த குரலில் கத்தினான்.
வெட்கித் தலை குனிந்தாள் தாயார்.
***
