PUBLISHED ON : ஜூன் 06, 2020

ரமணனும், நரேனும் இணைபிரியாத நண்பர்கள்; இருவரும் படிப்பில் சுட்டி; லட்சியமும் இருந்தது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்; வெளிநாட்டில் மேற்படிப்பு படித்து, நல்ல வேலையும் கிடைத்தது.
அந்த வேலையை துறந்து, நம் நாட்டில் சிறு தொழில் நிறுவனத்தை ஆரம்பித்தான் நரேன். மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனத்தில் சேர்ந்தான் ரமணன்; வெளிநாட்டுக் குடியுரிமையும் வாங்கி, நவநாகரிகமாக வாழ்ந்தான்.
காலம் நகர்ந்தது -
இருவரும், 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தனர்.
'சொல்லப்போனால், நீ என்னை விட, ஒருபடி மேலே தான் படித்தாய்... ஆனால், இந்தியாவில் ஒரு சிறு நிறுவனத்தை நிறுவி, முன்னேற உழைத்து வருகிறாய். ஆனால், கஷ்டம் தீரவில்லையே. என்னைப் பார்... மிகவும் சொகுசாக வாழ்கிறேன்... ஏவிய வேலையை செய்து, லட்சங்களில் சம்பாதிக்கிறேன். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை; நான் வசிக்கும் நாட்டிற்கு வந்து விடு... நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருகிறேன்...' என்றான் ரமணன்.
'உன் அன்பிற்கு நன்றி; வெளிநாட்டில் வேலை செய்து, பொருள் ஈட்டுவது தவறில்லை; அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. நம்நாடு இப்போது தான் முன்னேறி வருகிறது! அந்த முன்னேற்றுத்துடன் இணைந்து முடிந்த அளவு செயல்பட வேண்டும் என்ற எண்ணம் படிக்கும் போதே எனக்கு வந்து விட்டது...
'என் தயாரிப்புகளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவாணி ஈட்டுகிறேன்; 50 பேருக்கும் மேல் வேலை செய்கின்றனர்; அதுவே, மிகப்பெரிய திருப்தி...
'நம் நாட்டு பொருளாதாரத்தை உயர்த்த முயற்சி செய்தால் தான், எதிர்பார்க்கும் வளர்ச்சி நடக்கும். அந்த முயற்சியில், சிறு துளி உதவியாக இருக்கிறேன்...' என்றான் நரேன்.
அவனது லட்சியம் கண்டு வியந்து, 'நீ கூறுவது முற்றிலும் உண்மையே... எதை வேண்டுமானலும் ஏற்றுமதி செய்யலாம். ஆனால், அறிவு எனும் பொக்கிஷத்தை ஏற்றுமதி செய்யக் கூடாது. அறிவு பொக்கிஷத்தைப் பயன்படுத்தினால், நம்நாடு முதலிடத்தில் இருக்கும்... நானும் உன்னுடன் இணைய முயற்சிக்கிறேன்...' என்றான் ரமணன்.
குழந்தைகளே... நாட்டை, தாய் போல எண்ண வேண்டும்; அதன் முன்னேற்றத்திற்கு, கற்ற அறிவை பயன்படுத்த வேண்டும்.
வாண்டு மாமி
