PUBLISHED ON : ஆக 09, 2019

பெற்றோருக்கு ஒரே மகன் ரத்தினசாமி. வசதியான குடும்பம். அவனை நன்கு படிக்க வைத்து, அறிவாளியாக்க விரும்பினார் தந்தை முத்து. ஆனால், விளையாட்டுப் பிரியனாக இருந்தான் மகன். படிக்காவிட்டால், பள்ளியிலிருந்து விலக்கப்போவதாக பயமுறுத்தினார் தலைமையாசிரியர்.
ஆண்டு இறுதித் தேர்வில், தோல்வி அடைந்தான் ரத்தினசாமி. பெற்றோர் கண்டிப்பர் என பயந்து, வீட்டை விட்டு வெளியேறினான்.
வெகுதுாரம் நடந்து காட்டின் எல்லையை அடைந்தான். மிகுந்த களைப்பால், ஒரு மரத்தடியில் படுத்தான்; பலவீனத்தால் மயங்கி விட்டான்.
அந்த வழியாக வந்த பெரியவர், மயங்கி கிடந்தவனைக் கண்டு முதலுதவி செய்தார். தண்ணீரும், உணவும் கொடுத்தார். கண் விழித்த ரத்தினசாமி, பெற்றோர் படும் வேதனையை பொறுக்காமல், வீட்டை விட்டு வெளியேறியதாக தேம்பி அழுதான்.
பெரியவர், அவனை தேற்றி, 'கவலைப்படாதே, தோல்வியே வெற்றிக்கு முதல் படி; மனம் தளர்ந்து விடாதே; ஆரம்பத்தில் தோல்வியுற்று முயற்சியால் பின், வெற்றி அடைந்தவர்கள் ஏராளம். ஒரு கதை கூறுகிறேன் கேள்...
'ஒரு நாட்டு அரசன் எதிரிகளால், பலமுறை தோற்கடிக்கப் பட்டான்; எதிரிகளுக்கு பயந்து, மலையடிவார குகையில் ஒளிந்தான்.
'குகை நுழைவாயிலில், ஒரு சிலந்தி, வலை பின்ன முயன்று கொண்டிருந்தது. ஒரு முனையிலிருந்து, இழையை இழுத்த போது, அறுந்து விழுந்தது; இப்படி, பலமுறை நிகழ்ந்தது; மீண்டும் மீண்டும் முயன்று, வலையை பின்னி முடித்தது சிலந்தி...
'அதைப் பார்த்த அரசன், அறிவு பெற்றான்; மக்களை சந்தித்து, பெரும் படையை திரட்டி, எதிரி எதிர்பாராத நேரத்தில் தாக்கி, அபார வெற்றி பெற்றான்...
'அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரகாம்லிங்கன் கண்ட தோல்வி, ஒன்றிரண்டு அல்ல; இளமையில் வறுமையால் வாடியவர், தேர்தல்களில் தோல்வியை தழுவினார். இருப்பினும், முயற்சியை கைவிடவில்லை.
'முடிவில், அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்தார். இது வரலாறு. நீயும் இது போல் உயரலாம்... சோர்ந்து விடாதே...' என்று கூறி, பெற்றோரிடம் அழைத்து சென்றார்.
ரத்தினசாமி நம்பிக்கையுடன் படிப்பில் கவனம் செலுத்தினான். வெற்றிகளை குவித்தான்.
குட்டீஸ்... நம்மால் முடியாதது எதுவுமே இல்லை. கடினமான பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வழிகள் பல உண்டு. முயற்சி செய்யுங்க; சுலபமாக முன்னேறலாம்!
- செந்துாரான் பதிப்பகம்
