PUBLISHED ON : ஆக 09, 2019

புதிய தாவரங்கள்!
மனிதர்கள் அறியாத தாவரங்கள், விலங்கினங்கள் பல, உலகில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 2,000 புதிய தாவரங்களை கண்டுபிடிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஐரோப்பா கண்டம், இங்கிலாந்தில் உள்ள, ராயல் தாவரவியல் தோட்டத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டில், 100 புதிய தாவரங்களை அடையாளம் கண்டனர்.
அவற்றில் ஒன்று, தென் அமெரிக்கா கண்டம், பொலிவியா மலைப்பகுதியில் வளர்கிறது; இளஞ்சிவப்பு வண்ணத்தில் மிகவும் அழகாக பூக்கும்.
மேற்கு ஆப்ரிக்கா கண்டம், சியாரோலியோனி நீர்வீழ்ச்சி ஒன்றில், பாறையைப் பற்றி வளரும் தாவரத்தை, விஞ்ஞானி அயாலேப்பி கண்டறிந்துள்ளார். இதற்கு, 'லெபீயா கிராண்டி புளோரா' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுரங்கம், நீர்மின் திட்டங்களால், இந்த தாவரம், அழிந்து வருவதாக எச்சரித்துள்ளார்.
உலகில், 150 வகை பூச்சி உண்ணும் தாவரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆசியா கண்டம், இந்தோனேஷியாவின், வடக்கு கடலோரத்தில், பயாக் என்ற தீவில், 'நெபந்தஸ் பயாக்' என்ற பூச்சி உண்ணும் தாவரம், புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
இத்தீவுக்கு வரும் சுற்றுலா பயணியர் செயலால், இந்த தாவரம் அழியும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காபி தாவர குடும்பத்தைச் சேர்ந்த, 'கிண்டியா கங்கன்' என்ற தாவரத்தை, மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள படிவப்பாறை ஒன்றில் கண்டறிந்துள்ளனர். இந்த தாவரத்தில், புற்றுநோயை எதிர்க்கும் மூலக்கூறு இருப்பதாக, கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.
காட்டிலிருந்து கடத்தி வந்த தாவரம் ஒன்றை, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள லாவோஸ் தலைநகர் வியன்டியனில் கண்டுபிடித்துள்ளனர். அது ஒருவகை, ஆர்க்கிட் தாவரம். அழியும் நிலையில் உள்ளது; இதற்கு, 'பாபியோபிடியம் பாபிலியோலாடிகஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் மட்டும் வளரும், ஒரு வகை சேனைக்கிழங்கை, கண்டறிந்துள்ளனர். இதற்கு, 'டயாஸ்கோரியா ஹர்ட்டரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மிகப்பெரிய மரம் ஒன்று, மேற்கு ஆப்ரிக்காவின் மழைக்காடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது, இலையுதிர் காலத்தில், இளஞ்சிவப்பு நிறப் பூக்களால் குலுங்கும்; இந்த மரத்துக்கு, 'டால் போட்டில்லா சீக்கி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய ஆப்ரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டில், 'வெப்ரிஸ் பாலி' என்ற மரம் கண்டறியப்பட்டுள்ளது; இதுவும் அழியும் நிலையில் உள்ளதாக எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
கவனம் கொள்ள...
* மின் சாதனங்கள் அல்லது மின்சார ஒயர்களில் தீப்பிடித்தால், தண்ணீரை ஊற்றுவது தவறானது; உடனடியாக, மெயின் சுவிட்சை, 'ஆப்' செய்து, தீயணைப்பு கருவியை பயன்படுத்துவதே பாதுகாப்பானது
* நெருப்பு எச்சரிக்கை கருவியை, வீட்டில் பொருத்திக் கொள்வது பாதுகாப்புக்கு உகந்தது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
