PUBLISHED ON : நவ 11, 2023

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்திருநகரி இந்து உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 10ம் வகுப்பு படித்த போது, ஆங்கில பாட ஆசிரியராக இருந்தார் ரங்கன்; மிகவும் இனிமையாக பாடங்கள் நடத்துவார். ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
அன்று, ஒரு கேள்வி கேட்டார். வகுப்பில் இருந்த, 40 பேரும் விடையளிக்கவில்லை. இறுதியாக சரியான பதிலளித்தேன். என்னை பாராட்டியதுடன், விடையளிக்காத மாணவ, மாணவியருக்கு தலையில் ஆளுக்கு ஒரு குட்டு வைக்க கூறினார்.
வகுப்பில் என்னை விட உயரமாக இருந்தனர் பலர். அவர்களை கண்டதும், பயமாக இருந்தது. எனவே, மெதுவாக குட்டியபடி வந்தேன். உடனே, என் தலையில் ஓங்கி குட்டி, 'இப்படி செய்...' என விளக்கம் தந்தார் ஆசிரியர்.
வலி தாங்க முடியாமல் கண்களில் நீர் வழிந்தது. மிகுந்த வேதனையுடன், 'சரியாக விடை சொன்னதற்கு கிடைத்த பரிசா இது' என எண்ணிக் கொண்டேன். ஆனாலும் அந்த செயல் பெருமையாக இருந்தது.
எனக்கு, 64 வயதாகிறது; ஐதராபாத்தில் பிரபல எம்.என்.சி., கம்பெனியில் ஏற்றுமதி பிரிவை நிர்வகிக்கும் அதிகாரியாக இருந்தேன். இப்போது, தனியார் பள்ளி ஒன்றில், இசை ஆசிரியையாக பணிபுரிகிறேன். அன்று வகுப்பறையில் நடந்த சம்பவம் இன்றும் மனதை நெகிழ வைத்துக் கொண்டிருக்கிறது.
- பத்மா சுந்தர்ராஜன், திருநெல்வேலி.
தொடர்புக்கு: 75981 18521
