PUBLISHED ON : டிச 14, 2019

வயிற்று பொருமலா, செரிமான உறுப்புக்குறைபாடா, மலச்சிக்கலா, உடல் பருமனா... இவை எல்லாவற்றையும் எளிதில் சீராக்க கூடியது நார்ச்சத்து தான்.
உணவில், செரிமான உறுப்புகளால், செரிக்கப்பட முடியாத சில, 'கார்போ ஹைட்ரேட்' என்ற மாவுச்சத்து பொருட்கள் உள்ளன.
இவற்றை, வேதியியல் அடிப்படையில், துல்லியமாக பிரித்துக் காட்ட முடியாது என்றாலும், லிக்னின் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், பெக்டிக் மற்றும் தாவரப் பிசின்கள், பசைக்கூழ்கள் போன்றவற்றால் ஆனவை என்று கூற இயலும்.
நார்ச்சத்துக்களைப் பற்றி, 25 ஆண்டுகளுக்கு முன் எவரும் கண்டு கொண்டதில்லை. அப்போது, செரிக்க இயலாத எல்லாவற்றையும், ஒட்டு மொத்தமாக, 'சக்கை' என்றழைத்தனர். மலச்சிக்கலை நீக்க இது தேவை என்பதை மட்டும் உணர்ந்திருந்தனர்.
இன்று உடல் நலம் காப்பதில் நார்ச்சத்து முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ரத்தச் சர்க்கரையைக் குறைக்கிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைத்து, இதய நோய்களை தடுக்கிறது. பெருங்குடல் புற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. இவையெல்லாம் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
நார்ச்சத்து, செரிமான நொதிகளால் செரிக்கப்படுவதில்லை. மாவுப்பொருட்களான, சர்க்கரை, ஸ்டார்ச் போன்றவை போல, சிறு குடலாலும் கிரகிக்கப்படுவதில்லை. செரிமான உறுப்பு மண்டலத்தில் பயணிக்கும் போது, கடற்பஞ்சு போன்று, நீரை இழுத்து, நார்ச்சத்து உப்பிப் புடைக்கும். இதனால், உணவுக்குழம்பின் பருமனை அதிகரித்து, குடல் வழி பயண காலத்தைக் கூட்டும்.
ஒவ்வொரு வகை நார்ச்சத்திற்கும் தனிக்குணங்கள் இருக்கின்றன. சில பித்த உறுப்புகளுடன் இணைந்து, ரத்த ஓட்டத்தில் கலக்காத வண்ணம் தடை செய்கின்றன.
இதனால், ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து விடுகிறது. நார்ச்சத்துகளிலுள்ள பெதினையும், பிசினையும் உணவுடன் சேர்த்து, சோதித்துப் பார்த்த போது, உணவிற்குப் பின்னான, ரத்த ஓட்டத்தில், குளுக்கோஸ் அளவு குறைந்திருந்தது.
வெந்தயத்திலுள்ள பிசின், ரத்தக் குளுக்கோசையும், ரத்த கொழுப்பையும் வெகுவாக குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெந்தயத்தில், 40 சதவீதம் பிசின் இருக்கிறது; இதே அளவு பிசின் கொத்தவரை விதையிலும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் துணை புரிகின்றன. பிற உணவுகளைக் குறைக்கிற போது ஏற்படும் மலச்சிக்கலை நிவர்த்தி செய்கின்றன.
நார்ப்பொருட்களை உண்ணும் போது, மிகக்குறைவான சத்தே, உடலினுள் செல்கிறது; நார்ச்சத்தில்லாத கேக், ரொட்டி, சாக்லெட், ஐஸ்கிரீம், பாலாடை, இனிப்பு வகைகள் வாயில் இருக்கிற நேரம் மிக குறைவாகவே உள்ளது.
எனவே, தேவைக்கு மேல் உண்பது பற்றி தெரிவதில்லை.
காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், கீரை வகைகளை மென்று தின்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், வாயில் அதிக நேரம் இருப்பதுடன், பசி உணர்வையும் நீக்குகின்றன. அவற்றை பச்சையாக உண்ணலாம்.
புலால் உணவு வகைள், முட்டை, பால் பொருட்களில் நார்ச்சத்து எதுவுமில்லை.
அவரை, பீன்ஸ், கொத்தவரை, சோயாபீன்ஸ் போன்ற காய்கறிகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவற்றைச் சமைத்து உண்ணும் போது நார்சத்து கிடைக்கிறது.
