PUBLISHED ON : ஏப் 25, 2014
துணிகளை நீரில் நனைக்கும்போது அதன் நிறம் அடர்ந்த நிறமாக மாறுவது ஏன்?
உதாரணமாக, இளம் நீல நிறத்திலுள்ள ஒரு துணியை நீரில் நனைத்தால் அது சற்று அடர்ந்த நீல நிறத்தில் தோற்றமளிக்கும். இந்த நிறமாற்றம் சிந்தெடிக் மற்றும் பட்டுத் துணிகளில் அதிகம் ஏற்படுவதில்லை.
ஒரு பொருளுக்கு நிறம் உண்டாவது, அப்பொருள் மீது விழுகிற வெள்ளை ஒளிக்கற்றையில் குறிப்பிட்ட நிறத்தை அப்பொருள் அதிக அளவில் சிதறடிப்பதே காரணமாகும். ஒரு துணி நீல நிறத்தை சிதறடிப்பதால், அது நம் கண்களுக்கு நீல நிறமாகத் தோன்றுகிறது.
பருத்தித் துணிகளைப் பொறுத்த வரை அதன் இழைகள் சற்று தளர்ந்த நிலையில் நெய்யப் பட்டிருக்கும். பருத்தித் துணிகளின் இழைகளின் நடுவிலுள்ள இடைவெளியும், அதன் ஒழுங்கற்ற தன்மையும் நீல நிறத் தோடு, வெள்ளை நிறத்தையும் பரவலாகச் சிதறடிக்கிறது. எனவே, அத்துணி இளநீல நிறமாகத் தெரியும். அத்துணியை நீரில் நனைக்கும்போது இழைகளிலுள்ள இடை வெளி நீர் மூலக்கூறுகளால் நிரப்பப் படுகிறது. எனவே, ஒளிச்சிதறலின் அளவு குறைந்து, அடர் நீலமாகக் கண்ணுக்குத் தெரியும்.
சிந்தெடிக் துணிகளில் ஏற்கெனவே இழைகள் நெருக்கமாக நெய்யப் பட்டிருப்பதால், உலர்ந்த துணிகளுக்கும், நீரில் நனைத்த துணிகளுக்கும் அதிக நிற வேறுபாடு உண்டாவதில்லை.
