PUBLISHED ON : ஏப் 25, 2014

ஒரு குளத்தில் ஒரு வாயாடி ஆமை இருந்தது. அதே குளத்தில் மீன் பிடிக்க வரும் இரண்டு நாரைகளோடு ஆமைசிநேகமாக இருந்தது.
மழை இல்லாமல் குளம்வற்றியது. நாரைகள், ''ஆமையண்ணா! நாளையிலிருந்து நாங்கள் வர மாட்டோம். வேறு குளம் பார்த்து வைத்திருக்கிறோம். இதில் மீன்கள் இல்லாததால் அங்கு போகிறோம்!'' என்றன.
ஆமை வருத்தத்துடன், ''இறக்கை இருக்கறவன் எப்படி வேணா பறக்கலாம்! எனக்கு வேறே கதி இல்லையே!'' என்று பெருமூச்சுவிட்டது.
''நீ வாயை மூடிக்கொண்டு வந்தால் உன்னையும் அழைத்துப் போறோம்!'' என்றன நாரைகள்.
''எப்படி?'' என்று ஆர்வமாக ஆமை கேட்க, ஒரு குச்சியைக் கொண்டுவந்தன நாரைகள்.
''இதன் நடுபாகத்தைக்கெட்டியாகப் பிடித்துக்கொள். நாங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக குச்சியைத் தூக்கிக் கொண்டு பறப்போம். எதற்காகவும் நீ வாயைத் திறக்கக்கூடாது!'' என்றன.
ஆமை சம்மதித்து குச்சியைப் பற்றிக்கொள்ள, நாரைகள் குச்சியைப் பிடித்தபடி பறந்தன.
இந்த விசித்திர ஊர்வலத்தை எல்லாரும் வேடிக்கை பார்த்தனர். ஓரிடத்தில் மீன்களை உலர்த்தியிருந்தனர். அதைக் குளம் என்று எண்ணிய ஆமை, 'இங்கேயே இறங்கிவிடலாமே!' என்று கேட்க வாயைத்திறந்தது.
அப்போது நேர் கீழேயிருந்த பாறையில் ஆமை விழுந்து தலை உடைந்து மடிந்தது.
நமக்கு நன்மை செய்கிறவர்கள் பேச்சை அசட்டை செய்தால் உயிருக்கே ஆபத்து வரலாம்.
