PUBLISHED ON : மே 16, 2014

மணல் அதிகமாக உள்ள இடத்தில் ஏன் வேகமாக ஓட முடிவதில்லை?
நடத்தல் என்பது நமது எடையை நாமே முன்னுக்குத் தள்ளிச் செல்கிற ஒரு செயலாகும். தரையின் மீது நின்று கொண்டிருக்கும் நமது எடையை முடுக்கி முன்னே செலுத்துவதற்கான விசை, நமது உள்ளங்காலில் நிலவும் 'நிலை உராய்வி'லிருந்து பெறப்படுகிறது. இவ்விசை நாம் நடக்கும் போது தரையைக் காலினால் அழுத்துகின்ற விசைக்குச் சமமாகும். தரைக்கும் உள்ளங்காலுக்கும் இடையே நிலவும் நிலை உராய்வின் காரணமாகவே நமது கால்கள் தரையை ஆதாரமாக அல்லது பற்றுக் கோடாகக் கொண்டு உறுதியாக நிலத்தின் மீது நிற்க முடிகிறது.
உறுதியான தரையில் காலை அழுத்தும் போது உண்டாகும் எதிர்வினை நாம் முன்னோக்கிச் செல்வதற்கு ஏதுவாக அமைந்து, விரைந்து நடக்க அல்லது ஓட முடிகிறது. மணற்பாங்கான, பனி படர்ந்த அல்லது எண்ணெய் பரவிய தரையின் நிலை கெட்டியான தரையினின்றும் மாறுபட்டது.
நடக்கத் துவங்கும் போது காலின் அழுத்தத் தினால் ஏற்படும் விசை, மேற்கூறிய தரைகளில் நம்மைப் பின்னோக்கித் தள்ளுவதற்கே பயன் படுகிறது. காரணம், நமது காலடிப் பகுதிக்கும் தரைக்கும் இடையே நிலவும் உராய்வு, இத்தகைய நிலங்களில் நிலை உராய்வாக இல்லாமல் குறைந்த மதிப்புடைய வழுக்கு உராய்வாக மாற்றமடைகிறது. நமது உடலின் எடையை முன்னோக்கித் தள்ளு வதற்குத் தேவையான விசையை, கெட்டித் தரையில் நிலை உராய்விலிருந்து பெறுகின்ற அளவு, மணற்பாங்கான வழுக்கல் உராய்விலிருந்து பெற முடிவதில்லை. எனவே, மணல் நிறைந்த பகுதியில் நடப்பதற்கே மிகுதியான விசை தேவைப்படுவதால் விரைந்து ஓடுவது என்பது எளிய செயலல்ல.
