PUBLISHED ON : ஜூன் 14, 2013

முதலாவதாக அரங்கத்தின் நடுவில் கொசு வந்து நின்றது. தன் தாவும் திறமையைக் காட்ட நினைத்தது.
அங்கிருந்து வேகமாக உயரே பறந்தது. வடிவத்தில் சிறியதாக இருந்த அது, பறந்ததை யாரும் கவனிக்கவில்லை.
சிறிது நேரத்திற்குப் பின் கீழே வந்தது.
''ஆ எவ்வளவு உயரம் தாவினேன்?'' என்று பெருமையுடன் சொன்னது.
அது பொய் சொல்வதாக நினைத்த கூட்டத்தினர், ''நீ தாவவே இல்லை. தாவியதாகச் சொல்வதை நாங்கள் நம்ப மாட்டோம். மீண்டும் தாவிக் காட்டு,'' என்று கூச்சல் போட்டனர்.
நான்கைந்து முறை, அவர்கள் முன் பறந்து காட்டியது அது.
கண் இமைக்கும் நேரத்திற்குள் அது பறந்ததால் அவர்களால், பார்க்க முடியவில்லை.
''தாவாமலேயே தாவியதாக சொல்கிறாயா?'' என்று கூட்டத்தினர் கோபத்துடன் கத்தினர்.
என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தது அது. வேறு வழி இல்லாமல், தோல்வியை ஒப்புக் கொண்டது.
அடுத்ததாக, வெட்டுக் கிளி அங்கே வந்தது. 'தாவும் போதே, பல விளையாட்டுகள் செய்து காட்ட வேண்டும். அதைப் பார்த்து இவர்கள் மகிழ வேண்டும்' என்று நினைத்தது.
நேராகத் தாவாமல், குட்டிக்கரணம் அடித்தபடி தாவியது. அப்படியே இறக்கைகளை விரித்தது. அதன் கெட்ட நேரம், அப்போது காற்று வேகமாக வீசியது. அது நேராகச் சென்று அரசனின் மூக்கில் அமர்ந்தது.
எரிச்சல் அடைந்த அவர் அதைத் தன் கையால், தட்டி விட்டார்.
அரசனுக்காக வைத்திருந்த ரொட்டியில் அது விழுந்தது. ரொட்டியின் மேல் இருந்த வெண்ணையில் நன்றாகச் சிக்கிக் கொண்டது. அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.
அதன் நிலையைப் பார்த்து, எல்லாரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.
முயற்சி செய்து வெண்ணையில் இருந்து வெளியே வந்தது. இப்படிப்பட்ட அவமானம் நேர்ந்ததே என்று தலை கவிழ்ந்து நின்றது. மூன்றாவதாக, அரங்கத்திற்குள் மெல்ல வந்த விரால் மீனு அப்படியே படுத்துக் கொண்டது. நீண்ட நேரமாகியும் தலையை உயர்த்திப் பார்க்கவில்லை.
''இது எழுந்து தாவ எத்தனை நாட்கள் ஆகுமோ? நாம் ஏன் அதுவரை காத்திருக்க வேண்டும்,'' என்று எல்லாரும் கூச்சல் போட்டனர்.
என்ன செய்வது? எப்படி அதைப் போட்டியில் கலந்து கொள்ள வைப்பது என்று குழம்பினான் அரசர். அங்கிருந்த மருத்துவரைப் பார்த்தான்.
குறிப்பு உணர்ந்த அவர் அரங்கத்திற்கு வந்தார். விரால் மீனின் அருகே சென்றார். அது தூங்குகிறதா என்பதை அறிய அதன் முதுகைத் தொட்டுப் பார்த்தார்.
கூச்சம் அடைந்த அது வேகமாகத் துள்ளியது. ப்ளாப் என்ற ஓசையுடன் இளவரசியின் மடியில் சென்று விழுந்தது.
தன் மடியில் மீன் விழுந்ததைப் பார்த்த அவள் தன்னை மறந்தாள். நாணத்தால், தலை கவிழ்ந்தாள். அவள் முகம் மகிழ்ச்சியைக் காட்டியது.
இதைப் பார்த்த அரசன், ''இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது விரால் மீன்தான். அதைப் பாராட்டுகிறேன். அதன் வீரத்தைப் பார்த்து என் மகளும் அதை விரும்புகிறாள். அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நிகழும்,'' என்று அறிவித்தான்.
இதைக் கேட்ட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
''இவ்வளவு விரைவில் எனக்குத் திருமணமா?'' என்று முகத்தைச் சுளித்தாள் இளவரசி.
அவள் மடியில் இருந்த மீன் முதன் முறையாகப் பேசத் தொடங்கியது.
''அரசே! இந்தத் திருமணத்தை ஆறு மாதம் தள்ளி வையுங்கள். குளிர் காலம் முழுவதும் நான் நன்றாகத் தூங்கி ஓய்வு எடுப்பேன்,'' என்றது.
இதைக் கேட்ட இளவரசி, ''நானும் ஆறு மாதம் நன்றாகத் தூங்குவேன்,'' என்றாள்.
அந்த மீனை பார்த்த அவள், ''நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்,'' என்று மகிழ்ச்சியுடன் முணுமுணுத்தாள்.
அங்கே நடந்ததை எல்லாம் பார்த்த கொசு.
''இந்த மீனை விட அதிக உயரம் தாவியது நான்தான். எல்லாரையும் கவரும்படி நன்றாகப் பேசினேன். சோம்பலும், மூடத்தனமும் இங்கே வெற்றி பெற்றது,'' என்று புலம்பியது.
''இந்த உலகத்தில் உண்மைக்கும், உழைப்பிற்கும் மதிப்பு இல்லை,'' என்று புலம்பியது வெட்டுக்கிளி.
அது சொல்வதும் சரிதானே!
முற்றும்.
