PUBLISHED ON : ஜூன் 14, 2013

ஒருசமயம் பல்லவ நாட்டு அரசன் வீரர்களுடன் படகில் சென்று கொண்டிருந்தான். வேலையாள் ஒருவனும் அந்தப் படகில் இருந்தான். இதற்கு முன் அவன் படகில் பயணம் செய்ததும் இல்லை; கடலைப் பார்த்ததும் இல்லை. இதனால், கடலையும், படகையும் பார்த்து நடுங்கினான்.
அலைகளில் படகு மேலே ஏறி இறங்குவது, அவன் நடுக்கத்தை அதிகப்படுத்தியது.
''அரசே! என்னை விட்டு விடுங்கள். எங்காவது சென்று விடுகிறேன்,'' என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.
படகைவிட்டு வெளியே குதிக்க முயற்சி செய்தான். அவனை வீரர்கள் பிடித்துக் கொண்டனர். அவனோ திமிறிக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த அரசன், ''வீரர்களே! அவனைத் தூக்கிக் கடலில் போடுங்கள்,'' என்று கட்டளை இட்டான்.
வீரர்களும் அவனைத் தூக்கிக் கடலில் போட்டனர்.
தண்ணீரில் தத்தளித்த அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.
வீரர்களைப் பார்த்து அரசன், ''அவனைத் தூக்கி வந்து படகில் போடுங்கள்,'' என்றான்.
கடலில் குதித்த வீரர்கள் அவனைக் காப்பாற்றிப் படகுக்குக் கொண்டு வந்தனர்.
படகுக்குள் வந்த அவன் இப்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அமைதியாக இருந்தான்.
இதைப் பார்த்து வியப்பு அடைந்த வீரன் ஒருவன், ''அரசே! கடலுக்குள் தூக்கிப் போட்டதும், இவன் அமைதியாகி விட்டானே... என்ன காரணம்?'' என்று கேட்டான்.
அதற்கு அரசன், ''இவன் இதற்கு முன் கடலையோ, படகையோ பார்த்தது இல்லை. முதன் முதலில் அவற்றைப் பார்த்ததும் அஞ்சி நடுங்கினான். அவனைக் கடலில் தூக்கிக் போட்டதும் படகுதான் பாதுகாப்பு என்ற உண்மை அவனுக்குப் புரிந்து விட்டது. அதனால்தான் இப்போது அமைதியாக இருக்கிறான்,'' என்று விளக்கம் தந்தான்.
***
