
புதுச்சேரி மாநிலம், காரைக்கால், நெடுங்காடு அரசு நடுநிலைப் பள்ளியில், 1969ல், 6ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியராக இருந்தார் கல்யாண சுந்தரம்; மிகவும் கண்டிப்பானவர்; பாடங்கள் புரியும்படி, தெளிவாக கற்றுக் கொடுப்பார்.
வகுப்பில் எப்போதும் கலகலப்பாக இருக்கும் நண்பன் ரமேஷ், அன்று மிகவும் சோர்வுடன் காணப்பட்டான். விசாரித்த போது, 'வீட்டில் டிபன் தயார் செய்வதற்கு தாமதம் ஆகி விட்டதால், காலையில் எதுவும் சாப்பிடவில்லை. மிகவும் பசிக்கிறது...' என்றான். பள்ளி அருகில் என் வீட்டுக்கு அழைத்து சென்று, காலை உணவு வழங்கினேன். திரும்புவதற்குள் வருகை பதிவேடை சோதித்த ஆசிரியர், 'இரண்டு மாணவர்கள் எங்கே...' என்று விசாரித்துள்ளார்.
அடுத்திருந்தவன், 'ஐயா... இரண்டு புத்தகப்பைகள் உள்ளன. அவற்றுக்கு உரியவர்களை காணவில்லை...' என கூறக் கேட்டதும், 'வகுப்பை புறக்கணித்து ஊர் சுற்ற புறப்பட்டு விட்டனரா...' என்று கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
அந்த நேரம் திரும்பிய எங்களை பார்த்ததும், 'வெளியில் நில்லுங்கள்... எங்கே சுற்றி விட்டு வருகிறீர்...' என, கடுமை காட்டினார். நடந்ததை எடுத்துக் கூறியதும் சாந்தமாகி அனுமதித்தார்.
பின், 'காலை உணவை கண்டிப்பாக தவிர்க்க கூடாது. இரவில் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகிவிடுவதால், காலையில் வயிறு காலியாக இருக்கும். எனவே உண்பது அவசியம்...' என கூறி, என் செயலை பாராட்டினார்.
எனக்கு, 60 வயதாகிறது; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். உணவின் முக்கியத்துவத்தை புரிய வைத்த ஆசிரியரை, நினைவில் தாங்கியுள்ளேன்!
- என்.எஸ்.வி.நாதன், புதுச்சேரி.
தொடர்புக்கு: 93602 66439

