PUBLISHED ON : செப் 06, 2013

சாலையில் இளைஞன் ரவி நடந்து வந்தான். களைப்பு அடைந்த அவன் அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான்.
அவனைப் போன்றே முத்து என்ற இளைஞனும் அங்கே வந்தான்.
''ஆ! என்ன வெயில்! எப்படி மருதூர் நாடு செல்லப் போகிறேனோ?'' என்று சலித்துக் கொண்டே அமர்ந்தான் முத்து.
இதைக் கேட்ட ரவி, ''நானும் மருதூர் நாடு செல்கிறேன். அவ்வளவு தொலைவு தனியாக செல்ல வேண்டுமே... என்று கவலைப்பட்டேன். நல்லவேளை, துணைக்கு நீ வந்தாய்,'' என்றான்.
''பேசிக் கொண்டே சென்றால், பயண தொலைவு தெரியாது,'' என்றான் முத்து.
இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டனர். சிறிது தொலைவு சென்றிருப்பர். அவர்களுக்கு இடையே பேச்சு தடித்தது.
ரவியால் கோபத்தை அடக்க முடிய வில்லை. முத்துவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான்.
முத்துவின் கன்னம் வீங்கி விட்டது.
அவனை முத்து திருப்பி அடிக்கவில்லை. கன்னத்தை தடவியபடியே நாலா பக்கமும் பார்த்தான்.
அங்கிருந்த மணல் பரப்பில், 'நண்பன் ரவி என் கன்னம் வீங்கும்படி அறைந்தான்' என்று எழுதினான் முத்து.
பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுஆற்றங்கரை ஒன்றை அடைந்தனர்.
ஆற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.
''ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. அதை இப்போது கடக்க வேண்டாம். யாராவது ஆற்றைக் கடக்க இங்கே வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் கடக்கலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்,'' என்றான் ரவி.
''நீ வீணாக அஞ்சுகிறாய். ஆற்றில் வெள்ளம் பெரிதாக ஓடவில்லை. நான் முதலில் ஆற்றைக் கடக்கிறேன். பிறகு நீ வா,'' என்று முத்து ஆற்றில் இறங்கினான்.
ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்ற அவனை வெள்ளம் இழுத்துச் சென்றது.
''ரவி! என்னைக் காப்பாற்று,'' என்று அலறினான்.
அவன் அலறலைக் கேட்ட ரவி, ஆற்றில் பாய்ந்தான்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், முத்துவைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
கரை ஏறிய முத்து, அங்கிருந்த பாறை ஒன்றின் அருகே சென்றான்.
''நண்பன் ரவி தன் உயிரையும் மதிக்காது என்னைக் காப்பாற்றினான்,'' என்று செதுக்கினான்.
இதைப் பார்த்த ரவி, ''உன் கன்னத்தில் அறைந்தேன். அதை மணலில் எழுதினாய். உன்னைக் காப்பாற்றியதை அருகில் மணல் இருந்தும் பாறையில் செதுக்கினாயே ஏன்?'' என்று கேட்டான்.
''தீமையை அன்றே மறக்க வேண்டும். நல்லதை என்றும் நினைக்க வேண்டும். நீ செய்த தீமையை மணலில் எழுதினேன். காற்று அடித்ததும் அது மறைந்து விடும். நன்மையைக் கல்லில் செதுக்கினேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது அழியாமல் நிலைத்து நிற்கும்,'' என்றான் முத்து.
உணர்ச்சி வயப்பட்ட ரவி, ''உன் நட்பு கிடைத்ததைப் பெருமையாக கருதுகிறேன்,'' என்றபடி அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
பிறகு இரு வரும் மருதூர் செல்ல புறப் பட்டனர்.
***
