PUBLISHED ON : பிப் 08, 2013

மாஸ்கோவிலுள்ள புனித பாஸிலின் கதீட்ரலிலுள்ள அரும் பொருள் காட்சியகத்தைக் காண உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வந்து கூடுகின்றனர். ரஷ்ய நாட்டின் சின்னமாகவே இந்த தேவாலயம் விளங்குகிறது.
ஒன்பது கோபுரங்கள் விதவிதமான, வித்தியாசமான அமைப்புகளில் கதீட்ரலின் கூரையை அலங்கரிக்கின்றன. செஞ்சதுக்கத்தில் இக்கதீட்ரலைக் கட்டியவர் ரஷ்யாவின் முதல் ஸார் மன்னரான இவான். இவர், போஸ்ட் நிக், பார்மா என்னும் இருகட்டடக்கலைஞர் களிடம் இப்பணியை ஒப்படைத்தார். கதீட்ரலின் கட்டட வேலை 1554ல் தொடங்கியது. இவர்களுடைய கட்டட வரை படத்தைப் பார்த்த ஸார் மன்னர் திருப்தி அடைந்தார். அவ்விருவருடைய கண்களையும் பிடுங்கிக் குருடாக்கும்படி கட்டளையிட்டார். இதை விடச் சிறப்பாக வேறுயாருக்கும், ஒரு கட்டடம் கட்டித் தந்து விடக்கூடாது என்று.
பைசாந்தியம் காலத்துப் பாணியில் உருவாக்கப்பட்ட இக்கட்டடம் ரோமானிய ஓரியண்டல் (கீழ்த்திசை நாடுகள்) கட்டடக் கலையின் தாக்கமும் கொண்டது. பல வண்ணங்களையுடைய கட்டடம். கதீட்ரலின் மையப் பகுதி உயர்ந்த மேடை மீது நிறுவப்பட்டுள்ளது. எண் கோணம் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. பிரதானமான நான்கு பக்கமும் நான்கு எண் கோண பிரார்த்தனைக் கூடங்கள். இந்த நான்கு சப்பல்களுக்கும் இடை இடையே பல்கோணப் பிரார்த்தனைக் கட்டடங்களும் உள்ளன.
இவற்றுக்கு மேலாக, குமிழ் வடிவான டோம்களும் உள்ளன. பதினோராம் நூற்றாண்டு நாகரிகமாக ஏராளமான வண்ணங்களில் இக்கதீட்ரல் அலங்கரிக்கப் பட்டுள்ளது. தேவதைக் கதைகளில் வரும் அரண்மனை போல!
ரஷ்யாவில் புரட்சி ஏற்படும்வரை தேவாலயமாக விளங்கிய இது, பிறகு அரசுடைமையாகி மியூசியமாக மாறியது.
