PUBLISHED ON : செப் 26, 2020

சொட்டாம்பாளையம் கிராமத்தில், வாழ்ந்து வந்தான் ராமு; போதுமான அளவு செல்வம் இருந்தது. மிகவும் சோம்பேறியாக பொழுதை கழித்தான்; எப்போதும், உறங்கிக் கொண்டிருப்பான்.
ஒரு நாள் -
கிராமத்தை சுற்றிய போது, அழகான பறவையை பார்த்தான். அதனுடன் விளையாடி பொழுதை கழிக்க எண்ணி வீட்டிற்கு எடுத்து வந்தான்; உணவு அளித்தான்; பின், வழக்கம் போல் உறங்கி விட்டான்.
பொழுது விடிந்த போது, அதிர்ந்து போனான்; அவன் உணவளித்த பறவை, மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது.
'சிறிய பறவையை தானே எடுத்து வந்தேன்; இப்போது என்ன ஆயிற்று' என யோசித்தான் ராமு.
அந்த பறவை, 'பசிக்கிறது சாப்பிட ஏதாவது கொடு...' என்று கேட்டது. தானியங்களை அளித்தான். சாப்பிட்டதும் மீண்டும், 'பசிக்கிறது...' என்றது.
செய்வதறியாது திகைத்த ராமு, தனக்கான உணவையும் அளித்தான். அவனுக்கு சாப்பிட ஏதுவும் இல்லாததால் வெளியே சென்றான்.
இரவு வீடு திரும்பிய போது, அந்த பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது. வீடு முழுவதையும், அடைத்து கொண்டிருந்தது; அவனால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.
பயத்தில் வெளியில், படுத்து உறங்கினான ராமு.
மறு நாள் -
ராமுவுக்கு, மிகவும் பசியாக இருந்தது; அவ்வழியே மூட்டையைச் சுமந்து சென்ற, பெரியவர், 'இறக்கி வைக்க உதவு. பணம் தருகிறேன்...' என்றார்.
'உணவு கிடைக்குமா...' என கேட்டான் ராமு.
பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கி தந்த உணவு அமிர்தமாக இருந்தது.
சாப்பிட்டதும், 'பறவையை எப்படியாவது வீட்டை விட்டு அகற்றி விட வேண்டும்' என்று நினைத்தான்.
இப்போது சற்று சிறியதாக மாறியிருந்த பறவையிடம், 'இது எப்படி...' என்றான் ராமு.
'உன் சோம்பல் சற்று குறைந்து விட்டது அல்லவா... அதனால் தான்...' என்றது பறவை.
மறு நாள் -
கூலி வேலைக்கு, சென்றான் ராமு; கிடைத்த பணத்தில் வயிறார உண்டான். அவன் மனம் மகிழ்ச்சியாக இருந்தது.
'இனி உழைத்து தான் உண்ண வேண்டும்' என தீர்மானித்தான்.
பறவை, முதலில் இருந்தது போலவே மாறிவிட்டது.
மிகவும் வியப்புடன், 'இது எப்படி...' என கேட்டான் ராமு.
'உன் சோம்பேறி தனத்தை மாற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தவே அப்படி ஒரு உருவம் எடுத்தேன்...' என்றது பறவை.
'மிகவும் மகிழ்ச்சி... உணவை சாப்பிடு...' என்றான் ராமு.
'உன் அன்பிற்கு நன்றி... என் வேலை முடிந்தது... எப்போதும் உழைத்து உண்...' என கூறி பறந்தது.
செல்லங்களே... உழைத்தால் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.
ஜோ.ஜெயக்குமார்
