தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/திருந்திட்டேன்!

திருந்திட்டேன்!

திருந்திட்டேன்!


PUBLISHED ON : ஏப் 04, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெகு காலத்துக்கு முன் ஒரு அடர்ந்த காட்டின் மத்தியில் ஒரு பெண் சிங்கம் வசித்து வந்தது. அதன் பெயர் சிம்ரன். அது காட்டில் ஒரு மகாராணியாக உலா வந்துக் கொண்டிருந்தது. அது தன்னைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டு, காட்டில் வசித்து வந்த மிருகங்கள் அனைத்தும் தன்னை விட தகுதியில் தாழ்ந்தவை என்று எண்ணி, யாருடனும் பேசாமலும், பழகாமலும் ஆணவத்தோடு வாழ்ந்து வந்தது.

பெண் சிங்கம் தன் தகுதிக்கு குறைந்தவர்களோடு பேசுவதை கேவலமாக நினைத்தது. காட்டில் வசித்த அனைத்து மிருகங்களும், பிராணிகளும் பெண் சிங்கத்திடம் நட்பு கொள்ள அணுகிய போது, அதன் ஏளன பார்வையும், ஆணவ போக்கும் நாடி வந்த மிருகங்களையும், பிராணிகளையும் சலிப்போடு ஏமாற்றமடையச் செய்தது. பெண் சிங்கத்திற்கு இரண்டு சிறிய சிங்கக் குட்டிகள் இருந்தன.

ஒருநாள் பெண் சிங்கம் தன் குட்டிகளை தன் குகையில் விட்டு விட்டு, இறை தேடி சென்றது. இறை தேடி சென்று கிடைத்த இறையோடு குகைக்கு திரும்பிய பெண் சிங்கம், குகை வாசலில் தன் குட்டிகளை காணாமல் இருப்பதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தது.

குகைக்கு உள்ளே சென்று தேடியது. அங்கேயும் குட்டிகளை காணவில்லை.

குட்டிகளை காணாமல் வருத்தப்பட்ட சிங்கம், தன் குட்டிகளை பற்றி காட்டில் யாரிடம் கேட்பது என்று குழம்பி நின்றது. பிறகு அது தன்னந்தனியாக தன் குட்டிகளை காடு முழுவதும் தேட புறப்பட்டது. பெண் சிங்கம் வழியில் தென்பட்ட மிருகங்களிடமும், பிராணிகளிடமும் தன் குட்டிகளை பற்றி கேட்க, நெருங்கியது போது, அவை அனைத்தும் பயந்து ஓடி ஒளிந்தன.

குழப்பத்தில் நிலை தடுமாறி நின்ற, பெண் சிங்கம் ஒரு மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குரங்கை பார்த்தது.

குரங்கிடம் சென்ற சிம்ரன் சிங்கம், ''தன் குட்டிகளை எங்கேயாவது பார்த்தாயா...'' என்று கேட்டு, தன் குட்டிகளை தேடுவதற்கு உதவுமாறு தாழ்ந்த குரலில் கேட்டது.

குரங்கு உடனே, ''காட்டு ராணி அவர்களே! என் போன்ற சிறிய பிராணி உங்களுக்கு எப்படி உதவ முடியும். உங்களுக்கு சமமான அந்தஸ்தில் உள்ளவர்களை அணுகி, உங்கள் குட்டிகளை தேடித் தரச் சொல்லுங்கள்,'' என்று முகத்தில் அறைந்தார் போல் கூறியது.

குரங்கு கூறியதை கேட்ட சிம்ரன் சிங்கம், தன் குட்டிகளை தொலைத்த வருத்தத்தில் தன்னைத் தானே நொந்துக் கொண்டு குரங்கிடம் தன் குட்டிகளை தேடி கண்டு பிடிக்க உதவி செய்யுமாறு மீண்டும், மீண்டும் பிச்சைக் கேட்பது போல் கேட்டது.

குரங்கு மரத்தில் உட்கார்ந்த இடத்தில் இருந்து அசையாமல், சிங்கத்தின் பார்வையை தவிர்த்தது.

சிங்கம் குரங்கிடம், ''தான் தன்னை விட தகுதியில் குறைந்தவர்களோடு பழகாமலும், பேசாமலும் தவிர்த்து அவமானப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு வருந்துவதாக கூறியது. இன்று என்னுடைய குட்டிகள் காணாமல் போன பிறகு தான் தெரிந்தது, எல்லாருடைய உதவியும் தேவை என்று புரிந்து கொண்டேன்,'' என்றது.

மேலும், தொடர்ந்து கூறிய சிம்ரன் சிங்கம், ''யாரும் யாரையும் தேவையில்லை என்று ஒதுக்கி தள்ளக்கூடாது!'' என்றும் கூறியது.

தான் திருந்தியதாக கூறியதற்கு எந்தவித பதிலும் அளிக்காததால், சிங்கம் குரங்கிடம், ''தான் இனி எப்போதும் தன்னைவிட தாழ்ந்த மிருகங்களிடமோ, பிராணிகளிடமோ அலட்சியமாக நடந்து கொள்ளாமல் நட்போடு பழகுவேன். இது சத்தியம்,'' என்று சத்தியம் செய்தது.

சிம்ரன் மிகவும் உருகியதைக் கேட்ட குரங்கு மட்டுமின்றி, மரத்திலும் மரத்தை சுற்றிலும் இருந்த சிறிய, பெரிய பறவைகளும், பிராணிகளும், பெண் சிங்கத்தின் மீது இரக்கம் கொண்டு காணாமல் போன குட்டிகளை தேட ஆரம்பித்தன. அனைத்து பறவைகளும், பிராணிகளும் ஒட்டு மொத்தமாக செய்த முயற்சியால்,காணாமல் போன குட்டிகள் கிடைத்தன.

காணாமல் போன குட்டிகள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த சிங்கம், தன் குட்டிகளை தேடிக் கண்டு பிடித்து கொடுத்த அத்தனை பறவைகளையும், பிராணிகளையும் நன்றியோடு பார்த்தது. பிறகு கூடி இருந்த அனைத்து மிருகங்களிடமும், பறவைகளிடமும், பிராணிகளிடமும் தன்னிடம் இதுவரை இருந்த ஆணவத்தை எரித்து சாம்பலாக்கி விட்டு பாசத்தோடும், அன்போடும் பழகுவேன் என்று உறுதி கூறியது.சிம்ரனின் மன மாற்றத்தை கண்டு பிராணிகளும், பறவைகளும் மகிழ்ச்சி அடைந்தன.

எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சமயத்தில், சிறியவர்களின் உதவி கண்டிப்பாக தேவைப்படும். யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது குட்டீஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us