PUBLISHED ON : மே 27, 2023

மதுரை மாவட்டம், தேவகோட்டை, நகரத்தார் உயர்நிலைப் பள்ளியில், 1950ல், 8ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியர் செந்தில் வினாயகம் தஞ்சாவூரை சேர்ந்தவர். பாடத்தில் அந்த ஊர் பற்றி வந்தால் விரிவாக தகவல்கள் தந்து சுவைபட விளக்குவார்.
அன்றைய வகுப்பில், 'தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர். சோழநாடு சோறுடைத்து...' என பெருமையாக சொன்னார். உடனே எழுந்த மாணவன் நாகப்பன், 'ஐயா... சோழ நாட்டில் சோறு கிடைக்கும் போது, இங்கு ஏன் வந்தீங்க...' என கேட்டான். அனைவரும் அதிர்ச்சி அடைந்து, 'என்ன சொல்லப்போகிறாரோ' என காத்திருந்தோம்.
அதை பெரிதாக எண்ணாமல் புன்னகையுடன், 'இது பாண்டிய நாடு... முத்துடைத்து; யாம் முத்து எடுக்கவே இங்கு வந்துள்ளோம்...' என, தக்க பதில் கூறி கலகலப்பூட்டினார். சற்றும் உணர்ச்சி வசப்படாத அந்த பதில் மனதில் ஆழமாக பதிந்தது.
என் வயது, 85; அந்த ஆசிரியரிடம் கற்ற மன வலிமை, வாழ்வில் எப்போதும் பயன் உடையதாக இருக்கிறது.
- ம.ரெங்கராஜன், மதுரை.
தொடர்புக்கு: 94894 83132
