PUBLISHED ON : நவ 07, 2020

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, கீழ்க்குடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 1979ல், 6ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார், ரெபேக்காள் கலாநிதி.
தினமும் காலை, 8:30 மணிக்கே பள்ளிக்கு வந்து விடுவார். சீக்கிரம் வரும் மாணவ, மாணவியருக்கு, வாய்ப்பாட்டு கற்றுக் கொடுத்தார்.
ஆர்வம் கொண்ட பலரும் அதில் பங்கேற்று பயிற்சி பெற்றனர். வகுப்புக்கு தாமதமாக வந்து, தண்டனை வாங்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறைந்தது.
கிராமப் பெண்களை, 6ம் வகுப்பிற்கு மேல் படிக்க அனுமதிக்காத காலம் அது. பெற்றோரிடம் இது குறித்து கனிவாக பேசுவார். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பார்.
பொறுப்பு மிக்க அவரது செயலால் அந்த வழக்கம் முற்றாக ஒழிந்தது. அரசு, காவல், மருத்துவத்துறை என, உயர் பதவிகளில் பணியாற்றுகின்றனர், அந்த ஊர் பெண்கள்.
தினமும் மாலை ஆசிரியையின் வீட்டில் கூடுவர் கிராம பெண்கள். முகம் சுளிக்காமல் அனைவருக்கும் உதவுவார்; நல் ஆலோசனைகள் வழங்குவார்.
அவரை முன் உதாரணமாகக் கொண்டு, வாழ்வில் வெற்றி பெற்றுள்ளேன்.
தற்போது, என் வயது, 52; சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் உறுப்பினராக உள்ளேன். பலருக்கும் உதவும் வகையில் சேவைகள் புரிந்து வருகிறேன். இதற்கு ஊக்கம் தந்த ஆசிரியையை மனதில் கொண்டுள்ளேன்.
- சரளா கணேஷ், சிவகங்கை.
தொடர்புக்கு: 98653 48431
