PUBLISHED ON : அக் 21, 2023

மதுரை மாவட்டம், அப்பன் திருப்பதி அருகே பூண்டி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 1994ல், 4ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
என் அக்காவும் அதே பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்தாள். அன்று புதன்கிழமை காலை நேர வகுப்பு இடைவேளை முடிந்து, வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது, ஒரு மாணவியின் காதணி தவறி விழுந்தது. யாரும் அதை கவனிக்கவில்லை. என் அக்கா கண்ணில் பட்டதும் உடனே எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள். அந்த விபரத்தை, 'யாரிடமும் கூற வேண்டாம்...' என வலியுறுத்தினாள்.
அவள் செயலைக் கண்டித்து, 'மிகவும் தவறானது...' என எச்சரித்தேன். அவள் பொருட்படுத்தாததால் என் வகுப்பு ஆசிரியை லுார்துமேரியிடம் அது பற்றி கூறினேன்.
அக்காவை அழைத்து, காதணியை வாங்கி, உரியவளிடம் ஒப்படைத்தார் ஆசிரியை. பின், அது குற்ற செயல் என உணர்த்தி, மென்மையாக அறிவுரைத்தார்.
உடன் பிறந்தவள் என்றும் பாராமல், தவறை சுட்டி காட்டிய என்னை சக மாணவியர் முன்னிலையில் பெரிதும் பாராட்டினார். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், 'நேர்மையாக வாழ்வதே எப்போதும் லகுவானது...' என அறிவுரைத்தார்.
என் வயது, 37; பிரபல உறைவிடப் பள்ளி ஒன்றில் செவிலியராக பணிபுரிகிறேன். அந்த ஆசிரியை உணர்த்தியபடி நேர்மையை கடைபிடிப்பதை வாழ்வின் லட்சியமாக கொண்டுள்ளேன்.
- கே.பஞ்சவர்ணம், மதுரை.
தொடர்புக்கு: 96594 53698
