PUBLISHED ON : அக் 21, 2023

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 9ம் வகுப்பு படித்த போது, தி.மு.க.விலிருந்து, எம்.ஜி.ஆரை விலக்கி விட்டதாக காட்டுத்தீயாய் செய்தி பரவியது.
பல இடங்களில், கலவரம் நடந்தது.
எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் வீதிக்கு வந்தனர். பள்ளி அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழி மறித்து தீ வைத்தனர். அப்போது, கணித ஆசிரியர் முத்துசாமி கண்டிப்பான குரலில் அழைத்தார். பள்ளி வளாகத்துக்குள் உடனே சென்றோம்.
அவரது அறிவுரையை ஏற்காமல் வன்முறையில் ஈடுபட்ட பலர் கைதாகி சிறை சென்றனர். இதனால், அவர்கள் எதிர்காலம் பாழானது.
எனக்கு, 65 வயதாகிறது; தபால் துறையில் பணி செய்து ஓய்வு பெற்றேன். அன்று அந்த ஆசிரியரின் கண்டிப்பான கட்டளையை மதித்ததால் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து வாழ்வை சிறப்பாக அமைக்க முடிந்தது. இன்றும் அவரை நன்றியுடன் வணங்கி வருகிறேன்.
- என்.ராமகிருஷ்ணன், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 97869 91098
