PUBLISHED ON : மார் 12, 2022

கும்பகோணம், நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 11ம் வகுப்பு படித்தபோது, ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட ஆசிரியராக இருந்தார், ஏ.சக்கரபாணி. கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது.
பள்ளியில், 100 சதவீதம் தேர்ச்சியை உறுதி செய்யும் வகையில் சிறப்பு வகுப்புகளை அயராது நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். தினமும் அதிகாலையே வகுப்பு துவங்கிவிடும்; பள்ளியிலேயே காலை உணவு தந்தனர்.
முயன்று படித்து பொதுத் தேர்வை எழுதினேன். விருப்பப் பாடமான 'அல்ஜீப்ரா, ஜியாமிட்டரி' பிரிவில், 28 மதிப்பெண்களே பெற்றதாக மதிப்பெண் பட்டியல் காட்டியது. இது எனக்கு மட்டுமல்ல, அந்த ஆசிரியருக்கும் கடும் அதிர்ச்சியை தந்தது. கவலையுடன் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தேன்.
இதை அறிந்து தேடிவந்து தேற்றியவர், அந்த பாட விடைத்தாளை, மறுமதிப்பீடுக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார்.
அதன்படி, விண்ணப்பிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், திருத்திய மதிப்பெண் பட்டியல் வந்தது. அதில், விருப்பப் பாடத்திற்கு, 78 மதிப்பெண் என சரி செய்யப்பட்டிருந்தது. தவறுக்கு வருத்தம் தெரிவித்து, கல்வித்துறை ஒரு தந்தியும் அனுப்பியிருந்தது.
தற்போது, என் வயது, 69; என் மீது நம்பிக்கை வைத்து மறுமதிப்பீட்டுக்கு உதவிய அந்த ஆசிரியரை, மனதில் கொண்டுள்ளேன்.
- த.ஆசைத்தம்பி, சென்னை.
