PUBLISHED ON : மார் 12, 2022

திருவண்ணாமலை மாவட்டம், ராஜந்தாங்கல், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1999ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
கணித ஆசிரியர் என்.கே.குப்புசாமி, மிகவும் கண்டிப்பானவர்; தவறு கண்டுவிட்டால், பிரம்பால் சரமாரியாக விளாசுவார். அவரது வகுப்பு என்றால் நடுக்கத்துடன் இருப்போம். ஆசிரியர் பற்றாக்குறையால், ஆங்கில பாடத்தையும் அவரே எடுத்தார்.
அன்று, ஆங்கிலத்தில் விடுப்பு விண்ணப்பம் எழுத சொன்னார். மிகவும் கவனமாக எழுதிக்கொடுத்தேன்.
அதைத் திருத்திய போது, ஓர் எழுத்து விடுப்பட்டிருந்தது. இதைக் கண்டு பிரம்பால் விளாசியபடி, 'படிக்க இயலாதவர்களை ஒன்றும் செய்ய முடியாது; ஆனால், நன்றாக படிப்பவன் தப்பு செய்தால் அலட்சியம் என்றுதான் எண்ணத் தோன்றும்; மிகக்கவனமாக தேர்வுகளை எழுதி, முழு மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும்...' என அறிவுரைத்தார்.
அந்த கண்டிப்பான சொற்கள், மனதில் உந்துதலைத் தந்தன. அடிபட்ட வலியை மறந்து படிப்பில் கவனம் செலுத்தினேன். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.
எனக்கு இப்போது, 38 வயதாகிறது; கணித ஆசிரியராக பணியாற்றுகிறேன். ஓய்வு பெற்ற அந்த ஆசிரியரை அவ்வப்போது சந்தித்து ஆலோசனைகள் பெறுகிறேன். இப்போதும், அந்தக் கண்டிப்பு மாறாமல் கருத்துகளை சொல்வது வியப்பளிக்கிறது.
- வெ.செந்தில், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 63693 97298
