தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எத்தனை முட்டாள்கள்!

எத்தனை முட்டாள்கள்!

எத்தனை முட்டாள்கள்!


PUBLISHED ON : பிப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டுக்கோட்டை என்னும் கிராமத்தில் செந்தில் என்ற உழவன் இருந்தான். அவன் தாயும், மனைவியும் முட்டாள்களாக இருந்தனர். அவர்களைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். ஆனால் பயன் ஏதும் விளையவில்லை.

ஒருநாள்

செந்தில் வழக்கம் போல வயலுக்குச் சென்றிருந்தான். வீட்டில் குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.

திடீரென்று அவள், ''ஐயோ மகனே! உனக்கு இப்படிப்பட்ட கதியா வர வேண்டும்! நீ இல்லாமல் நான் மட்டும் எப்படி உயிர் வாழ்வேன்!'' என்று அழுது ஒப்பாரி வைத்தாள்.

அவளுடைய மாமியார் அழுகுரல் கேட்டு, பரபரப்புடன் வீட்டிற்குள் வந்தாள்.

''மருமகளே! ஏன் அழுகிறாய்? பேரன் நன்றாக தானே இருக்கிறான். பிறகு எதற்காக ஒப்பாரி வைக்கிறாய்?'' என்று கேட்டாள்.

''அத்தை! உங்கள் பேரனை வழக்கமாக இங்கேதானே படுக்க வைப்பேன். மேலே பாருங்கள். பரணில் அரிசி மூட்டை உள்ளது. தவறி அந்த மூட்டை கீழே விழுந்தால், என் மகனின் கதி என்ன ஆகும். அதை நினைத்துத்தான் அழுகிறேன்,'' என்று கூறினாள்.

''ஐயோ என் பேரனைக் காப்பாற்ற வழி தெரியவில்லையே,'' என்று மருமகளுடன் சேர்ந்து ஒப்பாரி வைத்தாள் மாமியார். இருவரின் அழுகுரலையும் கேட்டு, அந்த வீட்டின் முன் கூட்டம் கூடி விட்டது.

அவர்களில் ஒரு பெரியவர், ''என்ன நடந்தது? ஏன் அழுகிறீர்கள்?'' என்று கேட்டார்.

அவர்கள் இருவரும் அழுவதற்கான காரணத்தைச் சொல்லி ஒப்பாரி வைத்தனர். அவர்கள் சொன்னதைக் கேட்ட கூட்டத்தினர், ''இந்த பச்சிளம் குழந்தைக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட வேண்டுமா?'' என்று வருந்தினர்.

வயல் வேலைகளை முடித்து விட்டு செந்தில் வீடு திரும்பினான். வீட்டின் முன் ஊர் மக்கள் எல்லாரும் கூடியிருப்பதையும் தன் தாயும், மனைவியும் அழுது கொண்டிருப்பதையும் பார்த்து திகைத்தான்.

தன் தாயிடம், ''அம்மா என்ன நடந்தது? ஏன் அழுகிறீர்கள்?'' என்று பரபரப்புடன் கேட்டான்.

''உன் மகனை வழக்கமாகத் தூங்க வைக்கும் இடத்தைப் பார். அதற்கு மேலே பரணில் அரிசி மூட்டை உள்ளது. அந்த மூட்டை கீழே விழுந்தால் உன் மகனின் கதி என்ன ஆகும். அதை நினைத்துத் தான் அழுகிறோம்,'' என்றாள்.

அதைக் கேட்டு கோபம் அடைந்த செந்தில், ''உங்கள் இருவருக்கும் அறிவில்லை என்பது தெரியும். இந்த ஊரில் யாருக்குமே அறிவில்லையா?'' என்று கத்தினான்.

பரண் மேல் ஏறி அங்கிருந்த அரிசி மூட்டையை வேறு இடத்திற்கு மாற்றி வைத்தான்.

''இந்த வழி எனக்குத் தெரியாமல் போயிற்றே. தெரிந்திருந்தால் அழுது ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டேனே,'' என்றாள் மனைவி.

''எனக்கும் இது தெரியாமல் போயிற்றே,'' என்று தலை கவிழ்ந்தபடி கூறினாள் செந்திலின் தாய்.

கோபம் அடங்காத செந்தில், ''அரிசி மூட்டையை மாற்றாவிட்டால் என்ன? குழந்தையை வேறு இடத்தில் படுக்க வைத்தால் போயிற்று. உங்களுக்குத்தான் அறிவு இல்லை. வேடிக்கை பார்க்க வந்த இந்த ஊர் மக்களுக்கும் அறிவு இல்லையே... இப்படிப்பட்ட முட்டாள்களுடன் எப்படி வாழ்க்கை நடத்துவேன். உங்களை விடப் பெரிய முட்டாள்களைப் பார்த்த பிறகுதான் வீடு திரும்புவேன். இல்லையேல் திரும்ப மாட்டேன்,'' என்று உரத்த குரலில் கத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

சில நாட்கள் பயணத்திற்குப் பின், ஓர் ஊரை அடைந்தான். அங்கே ஒருவன் பெரிய கூடை ஒன்றை மார்பில் அணைத்தபடி அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். வியப்படைந்த செந்தில் அவனைத் தடுத்து நிறுத்தி, ''எதற்காக இப்படி ஓடுகிறாய்? இதற்குள் எதைப் பிடிக்கப் போகிறாய்?'' என்று கேட்டான்.

''ஐயா என் வீட்டிற்கு ஜன்னல்கள் ஏதும் இல்லை. அதனால் பகலில் கூட இருட்டாகத் தான் உள்ளது. சூரிய ஒளி உள்ளே வருவதே இல்லை. சிறிது சூரிய ஒளியைப் பிடித்துச் சென்று வீட்டில் விட்டால், வீடு ஒளிபெறும் என்று நினைத்தேன். சூரிய ஒளியைப் பிடிப்பதற்காகத்தான் கூடையுடன் அங்கும் இங்குமாக அலைகிறேன். சூரிய ஒளி சிக்க மாட்டேன் என்கிறது. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை,'' என்றான் அவன்.

'நம் வீட்டில் உள்ளவர்களை விட இவன் பெரிய முட்டாள்தான்' என்று நினைத்த செந்தில், ''கூடையில் எல்லாம் சூரிய ஒளியை பிடிக்க முடியாது. நான் சொல்கிறபடி செய்,'' என்றான்.

''என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் அவன்.

''கடப்பாரையால் உன் வீட்டுச் சுவரில் ஓட்டைபோடு. நடக்கும் அதிசயத்தைப் பார்,'' என்று அறிவுரை சொன்னான் செந்தில்.

கூடையோடு இருந்தவன் தன் வீட்டுச் சுவரின் ஒரு பகுதியைக் கடப்பாரையால் இடித்தான். பெரிய ஓட்டை விழுந்தது. உள்ளே சூரிய ஒளி பாய்ந்தது.

இதைக் கண்டு மகிழ்ச்சியால் கூத்தாடிய அவன், ''ஐயா நல்ல வழி காட்டினீர்கள். உங்கள் அறிவுரைப்படி நடந்ததால், என் வீட்டினுள் வெளிச்சம் வந்து விட்டது நன்றி,'' என்றான்.

அங்கிருந்து புறப்பட்டான் செந்தில்.

வழியில், ஒரு வீட்டிலிருந்து வந்த அழுகுரல் அவன் காதில் விழுந்தது. வீட்டுக் கதவு திறந்திருந்ததால் உள்ளே நுழைந்தான். அங்கே புதிதாகச் செய்யப்பட்ட பெரிய வண்டி ஒன்று இருந்தது. அதைப் பிடித்தபடி ஒருவன் அழுது கொண்டிருந்தான். அவனைப் பார்த்து செந்தில், ''ஐயா ஏன் அழுகிறீர்கள்?'' என்று கேட்டான்.

''நான் ஒரு தச்சன். மரப் பலகைள் வாங்கி வீட்டிற்குள் கொண்டு வந்து இந்த அழகான வண்டியைச் செய்தேன். கதவு சிறியதாக இருப்பதால் இந்த வண்டியை வெளியே எடுத்துச் செல்ல முடியவில்லை. வீட்டுச் சுவரை இடித்துத்தான் இந்த வண்டியை வெளியே கொண்டு செல்ல முடியும். என் முன்னோர்கள் கட்டிய அழகிய வீடு இது. இதை இடிக்க வேண்டி வந்ததே என்றுதான் அழுகிறேன்,'' என்றான் அவன்.

''இந்த வண்டியைப் பிரித்து வெளியே கொண்டு வந்து, மீண்டும் இணைத்து வண்டியாக்கக் கூடாதா? அப்படிச் செய்தால் சுவரை இடிக்க வேண்டாமே,'' என்றான் செந்தில்.

அப்படியே அந்தச் தச்சனும் வண்டியை பிரித்து வெளியே கொண்டு வந்து திரும்பப் பூட்டினான்.

''ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. நல்ல வழி சொன்னீர்கள்... இப்படிப்பட்ட அருமையான வழியைச் சொன்ன நீங்கள் எல்லாம் அறிந்த ஞானியாக இருக்க வேண்டும்,'' என்றான் தச்சன்.

'நான் சந்தித்த எல்லாரையும் விட இவன் பெரிய முட்டாள்' என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டான் செந்தில்.

வழியில் விந்தையான காட்சி ஒன்றை கண்டான். வீட்டுக் கூரையின் மேல் ஒருவன் அமர்ந்து இருந்தான். பக்கத்தில் ஏணி ஒன்று சாத்தி இருந்தது. அவன் கையில் கயிறு ஒன்றைப் பிடித்து இருந்தான். அதன் மற்றொரு முனை கீழே இருந்த எருமை மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்தது.

கயிற்றைப் பிடித்து எருமை மாட்டை மேலே இழுத்துக் கொண்டிருந்தான் அவன். அந்த மாடோ கத்தியபடி முரண்டுபிடித்தது.

''ஏன் எருமை மாட்டை இப்படிக் கொடுமைப்படுத்துகிறாய்'' என்று கேட்டான் செந்தில்

''ஐயா! இது என் எருமை மாடு. இரண்டு நாட்களாக என்னால் அதற்கு உணவு ஏதும் போட முடியவில்லை. பசியால் வாடுகிறது. இந்த வீட்டுக் கூரையில் சிறிது வைக்கோல் உள்ளது. ஏணி வழியாக நான் இங்கு வந்தேன். அதே ஏணி வழியாக ஏறி இந்த மாடும் வந்தால் வைக்கோலை மகிழ்ச்சியோடு உண்ணுமே. அந்த எண்ணத்தில் தான் மாட்டை மேலே இழுக்கிறேன். ஆனால், அதுவோ வர மாட்டேன் என்று தகராறு செய்கிறது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை,'' என்றான் அவன்.

''எருமை மாடு எங்காவது ஏணி வழியாகக் கூரையில் ஏறுமா? கூரையில் இருக்கும் வைக்கோலை எடுத்துக் கீழே போட்டால் மாடு உண்ணாதா?'' என்று கேட்டான் செந்தில்.

''இப்படி ஒரு வழி இருப்பது எனக்குத் தெரியாமல் போயிற்றே,'' என்று கூறி வருந்தினான் அவன். கூரையில் இருந்த வைக்கோலை எடுத்துக் கீழே போட்டான். எருமை மாடும் அந்த வைக்கோலை உண்டது.

நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்த செந்தில், 'இந்த உலகத்தில் இப்படிப்பட்ட முட்டாள்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களை ஒப்பிடும் போது என் தாயும், மனைவியும் எவ்வளவோ மேலானவர்கள்' என்று நினைத்தவாறு ஊர் திரும்பினான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us