PUBLISHED ON : மே 11, 2018

குயவர் ஒருவர், மண்பாண்டங்கள் செய்து கொண்டிருந்தார்; அந்நேரம், அவர் ஆசையாக வளர்த்த பூனை, ஒரு பூச்சியை பிடிப்பதற்காக, முழு மூச்சுடன் போராட்டம் நடத்தியது.
ஒரு கட்டத்தில், பூனை, தாவிய வேகத்தில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகள் உருண்டு, உடைந்தன. அதை பார்த்த பூனை, 'குயவர் எங்கே தன்னை அடித்து விடுவாரோ' என்ற பயத்தில் ஓட்டமெடுத்தது.
உடைந்த பானைகளை பற்றி கவலைப்படாமல், தன் வேலையைத் தொடர்ந்தார் குயவர்.
அன்று -
பகல் முழுக்க, கடினமான வேலைகள் முடிந்து, ஓய்வாக அமர்ந்த போது தான், பூனையின் ஞாபகம் வந்தது.
'இன்று, மதியம் சாப்பிடுவதற்கு பூனை வரவில்லையே... ஒருவேளை, அதுக்கு பயம் இன்னும் தெளியலையோ' என, எண்ணினார்.
அன்று இரவும், பூனை வராதது அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தது.
மறுநாள் -
காலையில், அப்பூனை குளிரில் நடுங்கியபடி, வீட்டு வாசலின் ஓரமாக அமர்ந்திருந்தது.
''பூனையே... நேத்து பூரா இங்கு தான் இருந்தியா... ஏன் வீட்டுக்குள்ள வரல...'' என்று கேட்டார்.
''எஜமானே... என்னை மன்னிச்சிடுங்க... பூச்சி பிடிக்கிற ஆர்வத்துல, பானைகள உடைச்சிட்டேன்... நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு பானைகள செஞ்சீங்க... நானோ அதை உடைச்சிட்டேன்... நீங்க என்ன அடிப்பீங்க என்ற பயத்தில் தான் வராம இருந்தேன்...'' என்றது.
குயவரோ, அந்த பூனையை, வீட்டிற்குள் அழைத்துச் சென்று, சூடானப் பாலை கொடுத்தார்; குளிர் நீங்கி, தெம்பானது.
''பூனையே... நீ பானைகளை உடைச்சதற்காக, நான் வருத்தப்படல... நான்கைந்து பானைகள உடைச்சிருப்ப...! ஆனா... தினம் தினம், ஏராளமான பானைகளை உருட்டி உடைக்கும் எலிகளை எல்லாம், நீ வேட்டையாடி கொன்றிருக்கிறாய்...
''நீ வந்த பின் தான், வீட்டில் எலி தொல்லை இல்லை; நானும், நிம்மதியா வேலை செய்கிறேன்! நீ எனக்கு தொடர்ந்து நன்மை செய்யும் போது, சிறு தவறுக்காக, உன்ன தண்டிக்க நினைக்கல... நான் உன்ன நேசிக்கிறேன்,'' என்றார்.
குயவரின் அன்பை பார்த்து மகிழ்ந்தது பூனை.
குட்டீஸ்... நாம ஒருத்தர நேசிச்சா, அவங்க செய்ற தப்பு எல்லாம், நமக்கு பெரிசா தெரியாது; அன்பு, சகலத்தையும் தாங்கும். எனவே, எல்லாரையும் நேசிங்க... பிறரது குற்றங்களை பெரிசு படுத்தாதீங்க... அவங்க செய்த நன்மைகள நெனச்சு பாருங்க... அப்போ உங்களால அவங்க செய்த குற்றங்களை மன்னிக்க முடியும்.
