PUBLISHED ON : செப் 13, 2013

ஆசிரியர் கல்வியின் பெருமை பற்றி மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார்.
''மாணவர்களே! கல்வி கண் போன்றது. கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு. நமக்கு உயர்வையும், சிறப்பையும் தரும் கல்வியை நாம் நாள் தோறும் படிக்க வேண்டும். படிக்காமல் ஒருநாளும் இருக்கக் கூடாது,'' என்றார் ஆசிரியர்.
குறுக்கிட்ட மாணவன் ஒருவன், ''ஐயா! நாள் தோறும் படிக்க வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகிறீர் கள். நான்கு நாள் படிக்க வேண்டியதைச் சேர்த்து ஒரே நாளில் படித்தால் என்ன?'' என்று கேட்டான்.
''ஒரு நாளைக்கு நீ இரண்டு மணி நேரம் படிப்பதாக வைத்துக் கொள்வோம். நான்கு நாட்கள் படிக்காமல் இருக்கிறாய். நான்கு நாட்களுக்கும் சேர்த்து எட்டு மணி நேரம் படிக்கிறாய். அப்படி படிப்பது தவறு. சிறிது சிறிதாக படித்தால் சிந்தித்துப் புரிந்து கொள்ள முடியும். நம் உள்ளத்திலும் ஆழமாக பதியும். அப்படி செய்யாமல் இடைவெளி விட்டு ஒரேயடி யாக படித்தால் எதுவும் உள்ளத்தில் பதியாது,'' என்றார்.
''நீங்கள் சொல்வது விளங்கவில்லை,'' என்றான் மாணவன்.
''நீ நாள்தோறும் மூன்று வேளை உணவு உண்கிறாய். அப்படி உண்டால்தான் அந்த உணவு நீ இயங்குவதற்கு வேண்டிய ஆற்றலைத் தரும். மாறாக, நீ நான்கு நாட்கள் பட்டினி கிடக்கிறாய். நான்கு நாள் உணவையும் சேர்த்து ஒரே நாளில் உண்கிறாய். அப்படி உண்டால் என்ன ஆகும்?'' என்றார் ஆசிரியர்.
''நான்கு நாள் பட்டினி கிடந்த பின், அவ்வளவு உணவையும் சாப்பிட முடியாது. சிறிதளவே சாப்பிட முடியும். மீறி அதிகமாக சாப்பிட்டால், எந்த வேலையும் செய்ய முடியாது. உணவு செரிமானம் ஆகாமல் வயிற்று வலியால் துன்பப் படுவேன்,'' என்றான் மாணவன்.
''நன்றாக சொன்னாய். கல்வியும் உணவு போன்றதுதான். நாள்தோறும் தொடர்ந்து சத்துள்ள உணவைச் சாப்பிட்டால், உடல் ஆற்றல் பெறும். அது போல, நாள்தோறும் தகுதியான நூல்களைக் கற்றால் நாம் பெருமை பெறலாம். பிறர் புகழும்படி வாழலாம்,'' என்றார் ஆசிரியர்.
''இனி நாள்தோறும் படிப்பேன். ஒருநாளும் படிக்காமல் இருக்க மாட்டேன்,'' என்றான் மாணவன்.
குட்டீஸ் நீங்களும் தினமும் படிப்பீங்கதானே!
***
