தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பாடாதே!

பாடாதே!

பாடாதே!


PUBLISHED ON : செப் 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு சலவை தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்த கழுதை சலவை தொழிலாளிக்கு பல வகைகளில் உதவி செய்தது. அழுக்கு துணி மூட்டைகளை ஆற்றுக்கு துவைக்க கொண்டு சென்று, துவைத்து, வெளுத்த துணிகளை மீண்டும், சலவை தொழிலாளியின் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் வேலையை, கழுதை தினமும் தவறாமல் செய்து வந்தது.

சலவை தொழிலாளி பகலில் வேலை முடிந் ததும், கழுதையை கட்டிப் போடாமல் இரவு முழுவதும் அதன் விருப்பம் போல சுற்றித்திரிய அனுமதித்தான். பகலில் வேலை முடிந்ததும், இரவில் ஓர் இடத்தில் தங்காமல் ஊர் சுற்றுவது கழுதைக்கு மிகவும் பிடித்த பொழுது போக்காக இருந்தது.

இரவு வேளையில் சுற்றிக் கொண்டிருந்த கழுதைக்கு, நரி ஒன்று நண்பனாக கிடைத்தது. கழுதையும், நரியும் இரவு வேளையில் ஓர் இடத்தில் சந்தித்து பேசி மகிழ்ந்தன. நரி ஒரு பகல் வேளையில் ஒரு வெள்ளரி காய்கள் காய்த்திருந்த தோட்டத்தை பார்த்தது. பகல் வேளையானதால் தோட்டக்காரன் தோட்டத் துக்கு கையில் பெரிய தடியுடன் காவல் இருந்தான். கையில் தடியுடன் இருந்த தோட்டக் காவல்காரனை பார்த்த நரி, பயந்து ஓடி ஒளிந்தது.

இரவு வந்ததும் கழுதையை சந்தித்த நரி, கழுதையிடம், ''நண்பா! இன்று பகலில் வெள்ளரிக் காய்கள் நிறைந்த தோட்டம் ஒன்றை பார்த்தேன். அங்கு சென்றால் நன்கு தேவையான அளவுக்கு வெள்ளரிக்காய்களை உண்டு மகிழலாம்,'' என்றது.

நரி கூறியதை கேட்ட கழுதை, ''தோட்டத் துக்கு காவலாக தோட்டக்காரன் இருப் பானே...'' என்றது.

''இரவில் தோட்டக் காரன் தூக்கத்தில் இருப்பான். அதனால், பயப்படாமல் என்னுடன் வா,'' என்று அழைத்து சென்றது நரி.

வெள்ளரி தோட்டத் தில் காய்ந்திருந்த வெள்ளரி காய்களை பார்த்த கழுதை, நரியை பாராட்டியது. தோட்டத்தை சுற்றி இருந்த சிறிய வேலியை தன் கால்களால் நசுக்கி நரியை தோட்டத்துக்கு உள்ளே அழைத்துச் சென்றது. கழுதையும், நரியும் வெள்ளரிக்காய்களை எந்தவித இடையூறும் இன்றி உண்டு மகிழ்ந்தன.

பகலில் வேலை எப்போது முடியும் என்று காத்திருக்கும் கழுதை. வேலை முடிந்ததும் இரவு ஆரம்பிக்கும் வேளையை எதிர்பார்த்து காத்திருக்கும். இரவு வந்ததும் நரியை சந்திக்க சென்று விடும். நரி கழுதையை விட புத்திசாலி. அது கழுதையிடம் தோட்டக்காரன் தூங்கும் வரை கழுதையை பொறுமையாக இருக்கும் படி கூறும். தோட்டக்காரனின் குறட்டை சத்தம் கேட்ட உடனே, கழுதையும், நரியும் தோட்டத் தில் புகுந்து, முற்றிலும் வெள்ளரிக்காய்களை உண்டு தங்கள் பசியை போக்கிக்கொள்ளும்.

தோட்டக்காரன் தன் தோட்டத்தில் காய்த்து இருந்த வெள்ளரிக்காய்கள் சில நாட்களாக குறைவதை பார்த்து குறைவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று நினைத்தான். இரவில் தூங்காமல் விழித் திருக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

ஒரு பவுர்ணமி இரவில் கழுதையும், நரியும் வழக்கம் போல வெள்ளரி தோட்டத்தில் புகுந்தது. அப்போது முழு நிலவு தோட்டத்தில் தன் ஒளியை வீசி கழுதையை புல்லரிக்கச் செய்தது. கழுதைக்கு அந்த முழு நிலவு ஒளியில் பாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அது நரியிடம், ''நண்பா! நான் நன்றாகப் பாடுவேன் அது உனக்கு தெரியுமா?'' என்று கேட்டது.

நரியும், ''நன்றாக தெரியும்!'' என்று தலையசைத்தது.

கழுதையும், ''நண்பா! நான் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவன். எனக்கு எல்லா ராகத்திலும் பாடத் தெரியும். உனக்கு எந்த ராகம் பிடிக்கும் சொல், உடனே பாடிக் காட்டு கிறேன்,'' என்று துள்ளிக் குதித்தப்படி நரியிடம் கூறியது.

கழுதை கூறியதை கேட்ட நரி பயந்து கழுதையை பார்த்து, ''நண்பா! இருட்டாக இருந்தாலும் பரவாயில்லை. முழு நிலவு சூரிய ஒளிபோல் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நீ கம்பீரமான குரலில் பாடினால், தோட்டக் காவல்காரன் மட்டுமல்லாமல், தோட்டத்தை சுற்றி <உள்ள வீடுகளில் வசிப்பவர் களும் தூக்கம் கலைந்து எழுந்து கொள்வர். தோட்டக்காரன் விழித்துக் கொண்டால் அது நமக்கு ஆபத்தமாக முடியும். நீ இந்த நிலா வெளிச்சத்தில் அதுவும் இந்த நேரத்தில் பாட வேண்டும் என்று நினைத்தால் வேறு ஒரு நாள் பயிர்கள் இல்லாத வயல் வெளியில் உனக்கு கர்நாடக இசையில் தெரிந்த அத்தனை ராகத் திலும் பாடு, நான் எனக்கு தெரிந்த அத்தனை நண்பர்களையும் அழைத்து வந்து உன் பாடலை கேட்டு ரசிக்கிறோம்,'' என்றது நரி.

நரி கூறியதை கேட்ட கழுதைக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. அது உடனே கர்நாடக இசையின் மகிமையை பற்றி சிறிதும் தெரியாத மக்கு என்று நரியை பார்த்து கூறி, தன் தலையை தூக்கி பாடுவதாக நினைத்துக் கத்தியது. நரி ஆபத்தை உணர்ந்து தோட்டத்தில் இருந்து ஓடி பாதுகாப்பான ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டது.

விழிப்புடன் இருந்த வெள்ளரி தோட்டத்து காவல்காரன் கழுதையின் உரத்த குரலை கேட்டு, பெரிய தடித்த தடியுடன் ஓடி வந்து கத்திக் கொண்டிருந்த கழுதையை தன் பலம் கொண்டமட்டும் அடித்து விரட்டினான். அடி வாங்கிய கழுதை வலியால் துடித்தபடி நொண்டி நடந்தபடி மெதுவாக தோட்டத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது கழுதையிடம் வந்து ஆறுதல் கூறியது நரி.

''நண்பா! நான் பாட வேண்டாம் என்று கூறியும் நீ கேட்காமல், பாடி அடிவாங்கி வலியால் துடிப்பதை பார்க்கும் போது வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. தோட்டக்காரன் தன் வயலில் காய்த்திருந்த வெள்ளரிக்காய்களை உண்ண நம்மை அழைக்கவில்லை. நாம் தான் அவனுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக தோட்டத்தில் நுழைந்து திருடிதின்றோம்.

''திருடர்கள் திருடும் போது மற்றவர் களுக்கு தெரியாமல் தான் திருடுவர். அவர்கள் திருடும் போது கத்தி கூச்சல் போட்டு தாங்கள் திருடுவதை வெளிகாட்ட மாட்டர். ஆனால், நீயோ ! திருடும் போது கத்தி கூச்சல் போட்டு, தோட்டக்காரனை எழுப்பி அவன் கையால் அடி வாங்கினாய். பிறர் சொல்வதில் உண்மையும், நன்மையும் இருந்தால் அதை கேட்க வேண்டும்,'' என்றது நரி.

நரி சொல்வதில் இருந்த உண்மையை அடி வாங்கிய பிறகு உணர்ந்த கழுதை, நடக்க முடியாமல் மெதுவாக நடந்து தன் எஜமானன் வீடு சேர்ந்தது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us