PUBLISHED ON : மே 11, 2018

அன்பு சகோதரி, ஜெனிபர் பிரேம்க்கு, சிறுவர்மலர் இதழின், நீண்ட நாள், மூத்த வாசகர் எழுவது. என் பேரன், மூன்றாம் வகுப்பு, படிக்கிறான்; முதல், மூன்று, 'ரேங்க்'கிற்குள் வந்து விடுவான்.
தனிப்பட்ட முறையில், கேள்விகள் கேட்டாலோ, கணக்கு போடச் சொன்னாலோ முழிக்கிறான். அவ்வப்போது, புத்திமதி சொன்னால், 'சரி...' என்று தலையாட்டுவான்; அவ்ளோ தான், அதைச் செய்ய மாட்டான்.
ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவான்; மென்னு சாப்பிடாமல், 'லபக்... லபக்...'ன்னு முழுங்குவான். இதனால், அடிக்கடி, ஜீரண கோளாறு ஏற்படுது; அவனை, சாப்பிட வைப்பதற்குள், போதும் போதும் என்றாகிறது. இவனை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. இதற்கு, சரியான தீர்வு சொல்லுங்க சகோதரி.
அன்புள்ள பெரியவருக்கு, வணக்கம்!
பேரன் பற்றி எழுதியிருந்தீங்க... இதெல்லாம், ஒரு பிரச்னையே இல்லை; கவலை வேண்டாம். உங்க பேரன், மூன்றாம் வகுப்பு தான் படிக்கிறான். கடுமையான போட்டி நிறைந்த உலகத்துல, மூன்றாவது, 'ரேங்க்' வருவதே கஷ்டம்.
எல்லாருமே, நூத்துக்கு நூறு வாங்கும் காலம் இது. ஒன்று, இரண்டு, 'மார்க்'கில் தான், 'ரேங்க்'கே வித்தியாசப்படுது... உங்க காலத்துல, 'பாஸ்' பண்ணிட்டாலே, நல்லா படிக்கும் மாணவன். அந்த காலத்து படிப்பு வேறு; இந்த காலத்து படிப்பு வேறு...
அதனால, சோதிக்கிறேன் என்ற பேரில், 'வாய்ப்படு சொல்லு; இந்த கணக்க போடு' என்று உங்க காலத்து கணக்கை கேட்டா, அவன் எப்படி போடுவான். உங்க படிப்பறிவை, இந்த காலத்து படிப்போடு, 'கம்பேர்' பண்ணாதீங்க...
அடுத்து, பேரன் மீதுள்ள பாசத்தில், 'அட்வைஸ்' பண்ணிக்கொண்டே இருக்கக் கூடாது... இந்த காலத்து பிள்ளைகள், அட்வைசை விரும்புவது இல்லை; ஒரு கதை போல் சொல்லுங்க; கேட்பாங்க.
உங்க பேரன் மட்டும் இல்ல... இன்றைய குழந்தைகளை சாப்பிட வைப்பதே பிரச்னையாகத்தான் உள்ளது.
அந்த காலத்துல, பால் சாதம், தயிர் சாதம், பருப்பு சாதத்தை, நிலாவை காட்டி, கதை சொல்லி, ஊட்டி விடுவர். ஒழுங்காக சாப்பிடுவர் குழந்தைகள். ஆனால், இன்று, வித விதமான உணவு வகைகள் இருந்தும், பிள்ளைகளை சாப்பிட வைப்பது, தனி கலை தான்.
ஒண்ணு செய்ங்க... உங்க மனைவிய, உருண்ட சாதம் பிசிஞ்சி, உங்களுக்கும், பேரனுக்கும், மாத்தி மாத்தி தரச் சொல்லுங்க... அப்போ, நீங்க, பேரனுக்கு கதை சொல்லணும்.
என்ன கதை தெரியுமா... சாதத்தை மென்னு சாப்பிடாத சிறுவனுக்கு, எப்படி வயித்து வலி வந்துச்சு, சுத்தமா இல்லன்னா, என்ன நடக்கும்; காய்கறிகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை, கதை போல சொல்லணும்.
பேரனுக்கு, 'அட்வைஸ்' பண்ண நினைப்பது எல்லாத்தையும், இப்படியே கதை போல சொல்லுங்க... சிறுவர்மலர் இதழில், எத்தன நீதிக்கதைகள் வருது... அதை எல்லாம் எடுத்து விட வேண்டியது தானே!
கதை கேட்டுகிட்டே, பல உருண்டைகளை சாப்பிட்டுடுவான்; அப்படியே யோசிக்க ஆரம்பிப்பான்; பழக்கவழக்கமும் மாறும். சரியா! பேரனுடன் என்ஜா... ய்...!
- நட்புடன், ஜெனிபர் பிரேம்!
